அரியலூர் அருகே ஜாதி விட்டுக் காதலால் பரபரப்பு.. தலித் வாலிபரின் வீடு தீக்கிரை!
அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே தலித் வாலிபருக்கும், வன்னியர் சமூகப் பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட காதல் காரணமாக அந்த வாலிபரின் வீட்டுக்கு சிலர் தீவைத்து விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செந்துறை அருகே உள்ள பிலாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ரத்தினம் என்பவரின் மகன் பாலமுருகன். இவர் தலித் வகுப்பைச் சேர்ந்தவர். அதேபோல சோழன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரின் மகள் தமிழரசி. இவர் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்.
பாலமுருகனும், தமிழரசியும் அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் 3ஆம் ஆண்டு
படித்து வருகின்றனர். இருவருக்கும் இடையே காதல் வலர்ந்துள்ளது. இது தமிழரசி வீட்டுக்குத் தெரிய வரவே, உடனடியாக மாதங்களுக்கு முன்பு கடலூரைச் சேர்ந்த இன்னொருவருக்கு நிச்சயம் செய்து விட்டனர். பிப்ரவரி 6ம் தேதி திருமணத்திற்குத் தேதி குறித்தும் விட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்தார் தமிழரசி. அவரும், பாலமுருகனும் ஆலோசித்துள்ளனர். அதன் பின்னர் 3 நாட்களுக்கு முன்பு தமிழரசி தனது வீட்டை விட்டு வெளியேறினார். அதேபோல பாலமுருகனையும் காணவில்லை. தமிழரசி வீட்டை விட்டு போகும்போது, வீட்டில் இருந்த 30 ஆயிரம் பணம், 2 பவுன் நகை மற்றும் வீட்டில் இருந்த செல்போனுடன் மாயமானதாக கூறுகிறார்கள்.
இந்த நிலையில், பாலமுருகனின் தாயார் வசந்தா போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முன்னெச்சரிக்கையாக பாலமுருகன் வீட்டுக்கும் பாதுகாப்பு கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலையில், பாலமுருகனின் வீட்டின் முன் போடப்பட்டிருந்த கீற்றுக்கொட்டகை தீ பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், தீயை போராடி அணைத்தனர்.
காவலர்கள் காவலுக்கு இருந்தும் கூட பாலமுருகன் வீட்டில் யாரோ தீவைத்துள்ளதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.