நாசமான சாலைகள்.. இரவு நேரங்களில் பஸ் வருவதில்லை.. என்னங்க இது.. வெறுப்பில் நெல்லை!
நெல்லையில் பெய்த மழையால் சிதிலமடைந்த சாலைகளால் பயணிக்க முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
நெல்லை: நெல்லை அருகே சேதமடைந்த சாலையால் கிராமமக்கள் கடுமையாக சிரமப்படுகின்றனர்.
நெல்லை அருகே சுமார் 3 கி.மீ. தூர இச்சாலையைக் கடக்க பஸ் பயணத்துக்கு 40 நிமிடங்கள் ஆகிறது. நெல்லை அருகேயுள்ள ரஸ்தாவில் இருந்து புதூர் செல்லும் சாலையை சுப்பிரமணியபுரம், உகந்தான்பட்டி உள்ளிட்ட 6 கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வழியாக பஸ் போக்குவரத்தும் உள்ளது. ஆனால் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் சீரமைப்பு பணிகள் கண்துடைப்பிற்கு நடைபெறாததால், குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்றுக் காணப்படுகிறது. இதில் அடிக்கடி மோட்டார் பைக் சிக்கி சரிவதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
இதனால் சாலை பகுதி முழுவதும் ஜல்லி கற்கள் மட்டுமே பரப்பி வைத்ததுபோல் காட்சி அளிக்கிறது. மேலும் மழை பெய்துவிட்டால் ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் மழை தண்ணீர் தேங்கியிருக்கிறது.
சாலை இருந்த இடமே தெரியாத அளவிற்கு பெரும்பாலான பகுதிகள் உருக்குலைந்து விட்டது. இதனால் நடந்து செல்பவர்கள் மற்றும் சைக்கிள், பைக்கில் உள்ளிட்ட பிற வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இச்சாலையில் செல்லும் பஸ்கள் சாலையைக் கடக்க 30 முதல் 40 நிமிடங்கள் தட்டு தடுமாறி செல்லும் நிலை உள்ளது. இதன் காரணமாக இரவு நேரம் உள்ளிட்ட பல நேரங்களில் பஸ்கள் வருவதில்லை என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த சாலையில் பொது மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.