குலசேகரபட்டினம் தசரா திருவிழா.. சூரசம்ஹாரத்தில் திரண்ட லட்சக்கணக்கான பக்தர்கள் !
தூத்துக்குடி: பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் நள்ளிரவில் நடந்த மகிஷா சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விரதம் இருந்து வந்த பல லட்சம் பக்தர்கள் கோவிலுக்கு வந்து தங்களது வலது கையில் காப்பு கட்டி தங்களுக்கு பிடித்தமான வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வந்தனர்.
10-ம் திருநாளான நேற்று பக்தர்கள் வசூல் செய்த காணிக்கைகளை கோவிலுக்கு கொண்டு சேர்ப்பதற்காக காலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். அம்மனை தரிசித்து விட்டு கடற்கரையில் வேடம் அணிந்த பக்தர்களும் பொதுமக்களும் லட்சக்கணக்கில் திரண்டனர்.
நேற்று நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கடற்கரைக்கு சென்றார். கடும் விரதம் இருந்த காளி வேடம் அணிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அன்னை முத்தாரம்மனை பின் தொடர்ந்து ஓம் காளி, ஜெய்காளி என்று கோஷமிட்டு சென்றனர். நள்ளிரவு 1 மணி அளவில் மகிஷா சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து அன்னை முத்தாரம்மன் கடற்கரையில் எழுந்தருளிய சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்பு சிதம்பரேஸ்வரர் கோவில் அருகிலும் தொடர்ந்து கோவில் கலை அரங்கத்திலும் அம்மன் எழுந்தருளி சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்பு இன்று அதிகாலை அலங்கரிக்கப்பட்ட பூஞ்சப்பரத்தில் அன்னை முத்தாரம்மன் எழுந்தருளி ஊர் பவனிக்கு புறப்பட்டு சென்றார்.
இந்தியாவில் மைசூரில்தான் தசரா விழா கோலாகலமாக நடைபெறும். அதற்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணத்தில் தான் அதே போன்று பெரிய அளவில் தசரா விழா நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது