பாலியல் மற்றும் கொலை குற்றவாளி தஷ்வந்த் புழல் சிறையில் அடைப்பு
சிறுமி ஹாசினி மற்றும் தன் தாய் சரளாவை கொன்ற வழக்கில் தலைமறைவாகி, மும்பையில் கைதான தஷ்வந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டான்.
சென்னை: சிறுமி ஹாசினி மற்றும் தன் தாய் சரளாவை கொன்ற வழக்கில் தலைமறைவாகி, மும்பையில் கைதான தஷ்வந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டான்.
சென்னை மவுலிவாக்கத்தைச் சேர்ந்தவர், பாபுவின் 7 வயது மகள் ஹாசினி. இவரை, அதே பகுதியைச் சேர்ந்த தஷ்வந்த் என்ற மென்பொறியாளர் பாலியல் பலாத்காரம் செய்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றான்.
இந்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஆனால் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததால் தஷ்வந்துக்கு ஜாமீன் கிடைத்தது. அவன் மீதான குண்டர் சட்டமும் ரத்து செய்யப்பட்டது.
தஷ்வந்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி தஷ்வந்த் தனது தாய் சரளாவை கொன்றுவிட்டு தலைமறைவானார்.
தப்பிய தஷ்வந்த்
தமிழக காவல்துறையினர் மும்பையில் தஷ்வந்தை கைது செய்தனர். ஆனால் போலீஸ் பிடியில் இருந்து தப்பினான் தஷ்வந்த்.
மும்பை நீதிமன்றம்
தேடுதல் வேட்டைக்குப் பின்னர் மீண்டும் தஷ்வந்த் கைது செய்யப்பட்டான். கை கால்களில் விலங்கிட்டு தஷ்வந்தை மும்பை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
நீதிபதி வீட்டில் ஆஜர்
தஷ்வந்தை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்துள்ளனர். மும்பையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் சென்னை அழைத்து வரப்பட்ட அவனை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்ற நீதிபதி சச்சிதானந்தம் வீட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
புழல் சிறையில் அடைப்பு
தஷ்வந்திற்கு டிசம்பர் 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்ற நீதிபதி சச்சிதானந்தம் உத்தரவிட்டார். இதனையடுத்து தஷ்வந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டான்.
புழல் அருகே நண்பர்கள் கைது
தஷ்வந்துக்கு உதவிய அவனது நண்பர்கள் தாஸ், டேவிட் ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர். புழல் அருகே காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.
குண்டர் சட்டம் பாயும்
தஷ்வந்த் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவன் மீது குண்டர் சட்டம் பாயும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் சிறுமி ஹாசினி கொலை வழக்கை இம்மாத இறுதிக்குள் முடிவுக்குள் கொண்டுவரவுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளார்.