பைத்தியகாரி போல உள்ளேன் .. யாரோ என்னை கூப்பிடறாங்க.. சாகபோறேன்.. தற்கொலை பெண்ணின் கடிதம் சிக்கியது
தந்தை இறந்துவிட்டதால் மகளும் தற்கொலை செய்து கொண்டார்.
கும்மிடிப்பூண்டி: தந்தையின் மரணம் தன்னை தற்கொலை வரை கொண்டுபோய் விட்டதை அந்த பெண் கனவிலும் நினைத்து பார்த்திக்க மாட்டார்.
கும்மிடிப்பூண்டியை அடுத்துள்ள உள்ள கிராமம் காரக்காட்டு குப்பம். இந்த கிராமத்திற்கு ராஜ்குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டு, 10 வருடத்திற்கு முன்பு வாக்கப்பட்டு வந்தார் கவிதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
டாஸ்மாக்
ராஜ்குமார் வேலை செய்வது அங்கிருக்கும் ஒரு டாஸ்மாக்கில். அங்கு போய் வேலையில் சேர்ந்தாலும் சேர்ந்தால், ராஜ்குமார் தினமும் தண்ணிதான். கணவரை எத்தனையோ முறை குடிக்க வேண்டாம் என்று கவிதா சொல்லி பார்த்தாயிற்று. டாஸ்மாக் முன்பு கவிதா அன்பு, பாசம், எல்லாமே தூள் தூளாக உடைந்து காணாமல் தடம் தெரியாமல்தான் போயிற்று. ராஜ்குமார் திருந்தவே இல்லை.
அப்பாவின் இழப்பு
எப்போதெல்லாம் கணவன்-மனைவி சண்டை வருமோ, அப்போதெல்லாம் கவிதாவுக்கு ஆறுதலும், தெம்பும், தைரியமும், எல்லாமே கிடைப்பது அவரது அப்பாவிடம் இருந்துதான். அப்பாவுக்கு கவிதா ரொம்ப செல்லம்... ரொம்ப பாசம்.. ஆனால் கடந்த அப்பா ராஜூ, கடந்த 3 மாதத்திற்கு முன்பு மாரடைப்பால் இறந்துவிட்டார். அப்பா இறந்த அதிர்ச்சியிலிருந்து கவிதாவால் மீளவே முடியவில்லை. எப்போதும் அப்பா ஞாபகம்தான்... 3 மாதம் யாருடனும் சரியாக பேசுவதில்லை.. சாப்பிடுவதில்லை.. ஒதுங்கியே சோக மயமாகவே நடமாடி வந்தார்.
கடிதம் சிக்கியது
ஒருகட்டத்தில் கவிதாவால் அப்பாவை மறக்க முடியவில்லை. இதனால் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீசார், விரைந்து வந்து விசாரணையை ஆரம்பித்தார்கள். அப்போது கவிதா வீட்டில் சோதனையும் நடத்தினர். அப்போது ஒரு கடிதம் சிக்கியது. அது கவிதா தன் கைப்பட கணவருக்காக எழுதிய கடிதம்தான். அதில் கவிதா எழுதியதாவது:
இன்னொரு திருமணம்
"அன்புள்ள கணவருக்கு, உங்கள் அன்பு மனைவி கவிதா எழுதிக்கொள்வது. எனக்கு வாழ விருப்பம் இல்லை. நான் பைத்தியக்காரி போல் இருக்கிறேன். நம்முடைய 2 குழந்தைகளையும் நன்றாக படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும். குடிப்பழக்கத்தை தயவுசெய்து விட்டுவிடுங்கள். நீங்கள் நல்ல பெண்ணை திருமணம் முடித்து கொள்ளுங்கள். இது என்னுடைய கடைசி ஆசை. நான் ஒரு கோழைத்தனமான முடிவை எடுத்து உள்ளேன்.
யாரோ கூப்பிடறாங்க
அம்மா என்னை மன்னித்து விடு. அப்பா இல்லாத வேதனையை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. அவரோடு நானும் போக முடிவு எடுத்து விட்டேன். யாரோ என்னை கூப்பிடுவது போல இருக்கிறது. என்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை. அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள்"
அப்பகுதி மக்கள் சோகம்
இவ்வாறு கவிதா எழுதி இருந்தார். கடிதத்தை படித்து கணவனும், கவிதா அம்மாவும் கதறி கதறி அழுதார்கள். தந்தையின் இழப்பை தாங்க முடியாமல் மகளின் தற்கொலையும், அவர் கணவனுக்காக எழுதிய கடிதமும் அப்பகுதி மக்களின் மனதை ரொம்பவே பாதித்து விட்டுள்ளது.