சொந்த தாய் வீட்டில் நகை திருட்டு... மகள், மருமகன் கைது
சேலம்: சேலத்தில் தாய் வீட்டிலேயே மகள் மற்றும் மருமகன் நகையை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம், செவ்வாய்பேட்டையிலுள்ள அர்த்தனாரி தெருவை சேர்ந்தவர் இராஜேந்திரன், சாந்தி(55) தம்பதி. சாந்திக்கு உடல்நிலை சரியில்லாததால், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுதற்காக தனது குடும்பத்துடன் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வீட்டில் இருந்து சென்றுள்ளார். வீட்டின் சாவியை அண்டை வீட்டில் கொடுத்துள்ளனர்.
அந்த தெருவின் அருகில் தொட்டசந்திர ஏட்டு தெருவில், சாந்தியின் மற்றொரு மகள் ரேவதி (28) அவரது கணவர் ராஜேஷிடன் வசித்து வருகிறார். இந்நிலையில், சாந்தியின் வீட்டிற்கு வந்த அவர்கள், வீட்டின் சாவியை வாங்கி, கதவை திறந்து, பீரோவில் 56-சவரண் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி ஆகியவற்றை யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்றுவிட்டனராம். மேலும், வீட்டை பூட்டிவிட்டு, பக்கத்து வீட்டாரிடம் சாவியைக் கொடுத்த அவர்கள், எதுவுமே தெரியாதது போல சென்றுள்ளனர்.
நேற்று, சாந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டில் நகை காணமல் போனதைக் கண்டு அதிர்சியடைந்தனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸாரின் விசாரணையில், ரேவதி அவரது கணவர் ராஜேஷ் ஆகியோர் தாங்கள் நகையை திருடிச்சென்றதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களை கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 56- சவரண் நகையை பறிமுதல் செய்தனர்.
சொந்த தாயின் வீட்டிலேயே மகள், அவரது கணவருடன் வந்து நகையை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.