தமிழக உளவுத்துறை புதிய ஐஜியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம்!
சென்னை: தமிழக உளவுத்துறையின் புதிய ஐஜியாக நிர்வாக ஐஜியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார். உளவுத்துறை ஐஜி கண்ணப்பன் ஓய்வு பெறுவதால் டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உளவுத்துறை ஐஜியான பி.கண்ணப்பன் வரும் 31-ந் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதனால் உளவுத்துறை புதிய ஐஜியாக யார் நியமிக்கப்படுவார்? என்ற விவாதம் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது.
அதே நேரத்தில் ஓய்வு பெற்ற பின்னரும் முன்னாள் தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன், முன்னாள் டிஜிபி ராமானுஜம் ஆகியோருக்கு அரசின் ஆலோசகர்கள் பதவி வழங்கப்பட்டது போல கண்ணப்பனுக்கும் பதவி நீட்டிப்பு கொடுக்க அரசு முன்வந்தது; ஆனால் அவர் நிராகரித்துவிட்டார் எனவும் கூறப்பட்டது.
இதையடுத்து உளவுத்துறை முன்னாள் ஐஜி அம்பரீஷ் பூஜாரி, சென்னை தெற்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனர் பி.தாமரைக் கண்ணன், கோவை மண்டல ஐஜி கே.சங்கர் மற்றும் காஞ்சிபுரம் டிஐஜி கே.என்.சத்யமூர்த்தி ஆகியோரது பெயர்களுடன் நிர்வாக ஐஜி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரில் ஒருவர் புதிய ஐஜியாக நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் பரவி இருந்தன.
இந்நிலையில்தான் உளவுத்துறை புதிய ஐஜியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.