பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு: தயாநிதிமாறனின் செயலாளர் உள்ளிட்ட மூவருக்கு ஜாமீன்
சென்னை: சன் தொலைகாட்சிக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதி வேக தொலைபேசி இணைப்புகள் முறைகேடாக வழங்கப்பட்டது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனின் முன்னாள் கூடுதல் தனிச் செயலர் உள்பட மூவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
தயாநிதிமாறன் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, 323 பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை தனது சகோதரர் கலாநிதி மாறனின் நிறுவனமான சன் தொலைக்காட்சிக்கு முறைகேடாக வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த முறைகேடு குறித்து விசாரணை செய்த சிபிஐ அதிகாரிகள் சன் தொலைக்காட்சியின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், தொழில்நுட்ப அதிகாரி கே.எஸ்.ரவி, தயாநிதி மாறனின் முன்னாள் கூடுதல் தனிச் செயலர் வே.கெளதமன் ஆகியோரை கடந்த 21ஆம் தேதி கைது செய்தனர். இவர்கள் மூவரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், நீதிமன்றக் காவலில் உள்ள மூவரும் ஜாமீன் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்தனர் இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனையடுத்து மூவரும் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், 3 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கவுதமன், கண்ணன் தலா ரூ.50 ஆயிரமும், ரவி ரூ.15 ஆயிரம் பிணைத் தொகை கட்ட உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், தங்களது பாஸ்போர்ட்டை ஒப்படைத்துவிட்டு, தினமும் காலை 10.30 மணிக்கு சிபிஐ விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.