பிஎஸ்என்எல் முறைகேடு : சிபிஐ நீதிமன்றத்தில் பதிலளிக்க அவகாசம் கேட்ட தயாநிதி மாறன்
பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு தொடர்பான மோசடி வழக்கில் தயாநிதி மாறன் இன்று ஜூலை 28ஆம் தேதி சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
சென்னை: சட்டவிரோத பிஎஸ்என்எல் இணைப்பு வழக்கு தொடர்பாக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் ஆஜரானார்.
சன்டிவி உரிமையாளர் கலாநிதி மாறன் ஆஜராகாத காரணத்தால் மாறன் சகோதரர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை.
தி.மு.க.வைச் சேர்ந்த தயாநிதிமாறன், கடந்த 2004ஆம் ஆண்டு முதல் முதல் 2007ஆம் ஆண்டு வரை மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தார். தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அதிவேக இணைப்புகளை தனது சகோதரரின் சன்டிவி நிறுவனத்திற்கு பயன்படுத்தினார் என்பது குற்றச்சாட்டு.
இதனால் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு பலகோடி இழப்பு ஏற்படுத்தினார் என்பது புகார்.
தனி டெலிபோன் எக்சேஞ்ச்
மத்திய அமைச்சராக தயாநிதிமாறன் இருந்த போது சென்னை அடையாறில் உள்ள தனது வீட்டிலிருந்து சன் டி.வி. அலுவலகத்திற்கு, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அதிவேக தொலைபேசி இணைப்புகளை வழங்கியதாக புகார் அளிக்கப்பட்டது.
சிபிஐ விசாரனை
இதுதொடர்பான புகாரின்பேரில் சன்டிவி அலுவலகம், மாறன் சகோதரர்கள் வீடுகளில் சிபிஐ சோதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையைத் அடுத்து தயாநிதிமாறன் மற்றும் அவரது சகோதரரும், சன் டிவி உரிமையாளருமான கலாநிதிமாறன் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது.
அரசுக்கு இழப்பு
350 இணைப்புகளை அளித்ததன் மூலம், அரசுக்கு சுமார் ஒரு கோடியே 78 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டதாக வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை, சென்னையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
நேரில் ஆஜராக உத்தரவு
இந்த வழக்கு கடந்த ஜூன் மாதம் 6ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி ஜவஹர், தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறன் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறியிருந்தார்.வெள்ளிக்கிழமை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
ஆஜரான தயாநிதிமாறன்
நீதிபதியின் உத்தரவின்படி, தயாநிதி மாறன் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நேரில் ஆஜரானார். இதில் சன்டிவி உரிமையாளரும் தயாநிதிமாறனின் சகோதரருமான கலாநிதி மாறன் நேரில் ஆஜராகவில்லை. அதனால், மாறன் சகோதரர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை.
ஊழியர்களும் ஆஜர்
சன்டிவி நிறுவனத்தில் பணியாற்றிய எஸ். கண்ணன், ரவி, முன்னாள் பிஎஸ்என்எல் மேனேஜர் பிரம்மநாதன், முன்னாள் துணை பொது மேலாளார் வேலுச்சாமி, தயாநிதிமாறனின் தனி செயல் அதிகாரி கவுதமன் ஆகியோரும் இந்த வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
அவகாசம் கேட்ட தயாநிதி மாறன்
சிபிஐ தாக்கல் செய்த சில ஆவணங்கள் தெளிவாக இல்லாததால் தயாநிதி மாறன் தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து தயாநிதி மாறனின் கோரிக்கையை ஏற்று பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கில் தயாநிதிமாறன், கலாநிதிமாறன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
நேரில் ஆஜராக விலக்கு கேட்ட கலாநிதி
பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி கலாநிதிமாறன் தரப்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவிற்கு பதிலளிக்குமாறு சிபிஐக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.