ரூ. 3300 கோடி 'கட்டிங்' அடித்து விட்டார் ஜெ... தயாநிதி மாறன் 'திகில்' பேச்சு!
திருச்சி: ஜெயலலிதாவின் மிடாஸ் நிறுவனம் உங்களது பணத்திலிருந்து ரூ. 3300 கோடிைய கட்டிங் அடித்து அதை ஜெயலலிதா நேராக தனது வங்கிக் கணக்கில் சேர்த்து விட்டார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பேசியுள்ளார்.
திருச்சி திமுக மாநாட்டில் இன்று தயாநிதி மாறன் பேசினா். வழக்கமாக அமைதியாக, நிதானமாக பேசும் தயாநிதி மாறன் இன்று தனது பேச்சில் முதல்வர் ஜெயலலிதாவை கடுமையாக சாடினார்.
இந்தப் படை போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா என்று ஸ்டைலாக ஆரம்பித்த அவர் ஜெயலலிதாவை கடுமையாக பிடித்தார். உச்சகட்டமாக கட்டிங் அடித்து விட்டார் என்று அவர் சொல்லப் போக திமுகவினரே அதை ஆச்சரியமாக கவனித்தனர்.
மேலும் முதல்வர் ஜெயலலிதாவை அவர் ஒருமையிலும் விளித்துப் பேசியதுதான் அவரது பேச்சின் முக்கிய ஹைலைட்டாகும்.
இந்தப் படை போதுமா....
இந்த படை போதுமா. இன்னும் கொஞ்சம் வேணுமா. சென்னையில் இருந்து திருச்சி வர 3 மணி நேரம். ஆனால், திருச்சி மாநகரில் இருந்து இங்கு (மாநாட்டு திடலுக்கு) வர 4 அணி நேரம். பாதிக்கூட்டம் இங்கு இருக்கிறது. மீதிக் கூட்டம் உள்ளே வர முடியாமல் வெளியே காத்துக்கிடக்கிறது.
உன் கனவு பலிக்குமா...
ஜெயலலிதாவே உன் கனவு பலிக்குமா? நீ பிரதமராக வேண்டும் என்ற கனவு பலிக்குமா. இந்தக் கூட்டத்தை பார்த்த பிறகாவது திருத்திக்கொள். உனது கனவு பலிக்காது.
என்னுடைய தலைப்பு.. பங்கு
எனக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு இந்திய அரசியலில் திமுகவின் பங்கு. திமுகவின் பங்கைவிட, கலைஞரின் பங்கை தான் நான் பேச வேண்டும். 69 முதல் மத்தியில் என்ன நடக்க வேண்டும். என்ன நடக்கக் கூடாது என்பதை தீர்மானித்தவர் நீங்கள். ஏழைகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டி, அதனை இந்திராகாந்தியை அழைத்து காட்டினீர்கள். அந்த திட்டம் இந்தியா முழுவதும் தற்போது உள்ளது.
குரல் கொடுப்பீர்கள்
ஜனநாயகத்திற்கு எப்போதெல்லாம் ஆபத்து வருகிறதோ, அப்போதெல்லாம் நான் இருப்பேன். எதிர்ப்பு குரல் கொடுப்பேன் என்று சொல்லி 75ல் நெருக்கடி நிலையை எதிர்த்து தீர்மானம் போட்டீர்கள். அதற்காக ஆட்சியை இழக்கிறோம் என்று சொல்லி 76ல் ஆட்சியையும் இழந்தீர்கள். அப்போது கழகத்தில் உள்ள அனைவரும், தளபதி, எனது தந்தை, ஆற்காட்டார் உள்பட அனைவரும் சிறைச்சாலையில் இருந்தார்கள்.
பின்னர் என்ன செய்தீர்கள்...
பின்னர் என்ன செய்தீர்கள். தேசிய அளவில் காங்கிரசுக்கு அடுத்தப்படியாக ஒரு நல்ல ஆட்சி வரவேண்டும் என்று ஜனதா கட்சியை கைகாட்டினீர்கள். அந்த ஆட்சி நிலையாக நிற்காதபோது, 80ல் மீண்டும் உங்களை சந்திக்க இந்திரா காந்தி வந்தார்கள். அப்போது இந்திராகாந்தி மெரீனா கடற்கரை கூட்டத்தில், நான் தவறு செய்துவிட்டேன். எமர்ஜென்சியை கொண்டுவந்தது தவறு என்று மன்னிப்பு கேட்க வைத்தது நீங்கள்தான். அப்போது 40ல் 38ல் வெற்றி பெற்றோம். அங்கே ஆட்சி அமைய காரணமாக இருந்தீர்கள். இந்திரா காந்தி சொன்னார்கள், நல்ல நண்பர், உறுதியாக இருப்பார் என்று பாராட்டினார்கள்.
தேசிய முன்னணியைத் தொடங்கி வைத்தீர்கள்
87ல் மத்தியில் நல்ல ஆட்சி வரவேண்டும் என்கிறபோது, தேசிய முன்னணியை நீங்கள் தான் துவக்கி வைத்தீர்கள். துவக்கி வைத்து சென்னையில் கூட்டம் நடத்தி, வி.பி.சிங். பிரதமராக வர காரணமாக இருந்தீர்கள். அவர் வந்த பிறகுதான் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு பெறவரவேண்டும் என்று மண்டல் கமிஷன் வரவைத்தீர்கள். அதற்காகத்தான் அவர் ஆட்சியை இழந்தார். கலைப்படாதீர்கள். நீங்கள் மக்கள் மனதில் நிறைந்திருக்கிறீர்கள் என்று தமிழகத்தில் உள்ள மூளை முடுக்கெல்லாம் அழைத்து பாராட்டு விழா நடத்தினீர்கள். அந்தக் காரணத்திற்காக உங்கள் ஆட்சியை அவர்கள் கலைத்தார்கள்.
தமாகா உருவாக காரணமாக அமைந்தீர்கள்
96ல் தமாகா உருவாக நீங்கள்தான் காரணமாக இருந்தீர்கள். அப்போது 40க்கும் 40 என வெற்றிபெற்று மீண்டும் அங்கு ஆட்சி அமைய நீங்கள்தான் காரணம். அப்போது தேவகௌடாவை பிரமராக்கியதும் நீங்கள்தான். குஜராலை பிரதமராக்கியதும் நீங்கள்தான். ஆனால் அந்த ஆட்சி நிலைக்கவில்லை. 98ல் தேர்தல் வருகிறது. அப்போது தமிழக மக்கள் தவறு இழைத்ததால் ஜெயலலிதா ஆதரவினால் மத்தியில் ஆட்சி வருகிறது. வாஜ்பாய் தலைமையில் மத்திய ஆட்சி நடந்தது. அந்த ஆட்சி ஒரு ஆண்டு கூட நிற்கவில்லை. காரணம் ஆதரவு தந்தது யார். ஜெயலலிதா.
வாஜ்பாய்க்கு ஆதரவு தந்தீர்கள்
12 மாதங்களில் ஜெயலலிதாவால் ஆட்சி கவிழ்கிறது. வாய்பாய் கேட்டார் ஆதரவு தாருங்கள் என்று. நிலையான ஆட்சி அமைய ஆதரவு தருவதாக கூறினீர்கள். ஆனால் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்திலே வாஜ்பாய் அரசு கவிழ்கிறது. அப்போது வாஜ்பாய் என்ன சொன்னார் தெரியுமா? 12 மாதங்கள் ஜெயலலிதாவோடு கூட்டணி வைத்துக்கொண்டு ஒருநாள் கூட நிம்மதியாக தூங்கவில்லை. ஆட்சியை இழந்த பின்னர் நிம்மதியாக தூங்குகிறேன் என்று சொன்னார்.
மீண்டும் உட்கார வைத்தீர்கள்
நீங்கள் (கலைஞர்) மீண்டும் வாஜ்பாயை பிரதமராக உட்கார வைத்தீர்கள். அப்போது முரசொ- மாறன் வர்த்தக துறை அமைச்சராக இருந்தார். தமிழகத்தில் தொழில் வளம் உருவானது. பல முதலீடுகள் வந்தன. மீண்டும் 2004ல் சோனியா காந்தி வருகிறார்கள். உங்களை (கலைஞர்) சந்தித்து கூட்டணி வைக்கிறார்கள். இந்திராவின் மறுமகளே வருக. நிலையான ஆட்சி தருக என்று சொன்னார்கள். 40க்கு 40 என வெற்றி பெறுகிறோம். முதன் முறையாக திமுகவைச் சேர்ந்த 7 பேர் மத்திய அமைச்சர்களாக இருந்தார்கள்.
வாட்ச் இருக்கோ இல்லையோ.. செல் போன் இருக்கே
டி.ஆர்.பாலுவால் இந்தியா முழுவதும் சாலை வசதிகள் பெருகியது. கையில் வாட்ச் இருக்கோ இல்லையோ செல்போன் வந்திருக்கு. ஒரு ரூபாய்க்கு இந்தியா முழுவதும் பேச வாய்ப்பை தர முடிகிறது. பல தொழிற்சாலைகள் வந்துள்ளது. இதற்கு காரணம் நீங்கள்தான் கலைஞர் அவர்களே.
கேப்டன் பிராந்தி.. கேப்டன் ரம்
இன்று பகல் கனவு காணும் ஜெயலலிதா என்ன செய்துகொண்டிருக்கிறார் என்றால், பெரிய சாதனை என்னவென்றால் டாஸ்மாக் தான். டாஸ்மாக்கில் பிரபலமான பிராண்ட் வேண்டும் என்றால் கேப்டன் பிராந்தி, கேப்டன் ரம், ஜெட் பிராந்தி, ஜெட் விஸ்கி என சுமார் 32 ஐட்டம் ஒரே ஒரு நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. அந்த நிறுவனம் மிடாஸ். அதற்கு சொந்தக்காரர்கள் யார் என்றால் ஜெயலலிதாவும், சசிகலாவும். அந்த நிறுவனத்தில் இருந்து டாஸ்டாக்கிற்கு மாதத்திற்கு 11 லட்சம் பெட்டிகள் சப்ளை செய்கிறார்கள். மற்ற நிறுவனங்களிலும் இருந்து மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று லட்சம் பெட்டிகள் வாங்குகிறார்கள்.
உங்கள் கட்டிங்கிலிருந்து....
ஒரு ஆண்டுக்கு மிடாஸ் நிறுவனம் உங்கள் கட்டிங்கிலிருந்து கட்டிங் ரூபாய் 1,120 கோடி. இந்த மூன்று ஆண்டுகளில் ஜெயலலிதாவின் மிடாஸ் நிறுவனம் உங்கள் பணத்திலிருந்து ரூபாய் 3,300 கோடி கட்டிங் அடித்து நேராக வங்கியில் வைத்துக்கொண்டிருக்கிறார். அவர் இந்தியாவின் பிரதமராகவேண்டுமாம்.
காலையில் ரெட் போர்ட்.. மாலையில் ஸ்பெஷல் கோர்ட்
சற்றே நினைத்து பாருங்கள். ஜெயலலிதா பிரதமரானால் என்ன ஆகும். காலையில் ரெட் போர்ட்டில் கொடி ஏற்றுவார். மாலையில் பெங்களூரு கோர்ட்டில் சாட்சி சொல்லுவார். இதுதான் நடக்கும்.
கட்டாயம் 40க்கு 40
கலைஞர் அவர்களே, நீங்கள் திருப்பு முனை மாநாடு என்று சொன்னீர்கள். 96ல் திருச்சியில் மாநாடு நடந்தது. நாம் 40க்கு 40 வெற்றி பெற்றோம். 2006ல் இங்கு மாநாடு நடந்தது. நீங்கள் மீண்டும் முதலமைச்சராக வந்தீர்கள். மீண்டும் 2014ல் திமுக மாநாடு நடைபெறுகிறது. கட்டாயம் 40க்கு 40 என வெற்றி பெறுவோம். கட்டாயம் நீங்கள் யாரை கை காட்டுகிறீர்களோ அவர்தான் பிரதமர் என்றார் தயாநிதி மாறன்
தயாநிதி மாறன் இவ்வளவு விரிவாக, காரசாரமாக, ஆவேசமாக பேசி இதுவரை கேள்விப்பட்டதாக தெரியவில்லை.