“ஓவர்” லோக்சபா தேர்தல் செலவு: சிக்கலில் தயாநிதிமாறன், டி.கே.எஸ் இளங்கோவன்
சென்னை: தேர்தல் ஆணையம் நிர்யணம் செய்த தொகையை விட பல லட்சம் கூடுதலாக செலவு செய்துள்ளதாக தென்சென்னை திமுக வேட்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் மீது புகார் எழுந்துள்ளது.
இதேபோல மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் பொய்யான செலவு கணக்கினை தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ரூ.70 லட்சம் செலவு செய்யவேண்டும் என்று தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. தேர்தல் முடிந்த உடன் இந்த செலவு கணக்குகளை முறையாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதன்படி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் தங்களின் தேர்தல் செலவு கணக்குகளை தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளனர்.
தயாநிதிமாறன் செலவு கணக்கு
மத்திய சென்னையில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தயாநிதிமாறன், பத்து லட்சம் ரூபாய் மட்டுமே செலவு செய்துள்ளதாக கணக்கு கொடுத்துள்ளார்.
பிரம்மாண்ட போஸ்டர்கள்
வாரந்தோறும் வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்கை காண்பிப்பது போல, தேர்தல் பார்வையாளர்களும் ஒவ்வொரு வேட்பாளரின் செலவு கணக்கை வாரந்தோறும் மதிப்பிடுவார்கள். பிரம்மாண்ட போஸ்டர்களை ஒட்டி ஆடம்பரமாக செலவு செய்தார் தயாநிதிமாறன்.
இரண்டு வாரத்தில் 80 லட்சம்
முதல் இரண்டு வாரத்திலேயே தயாநிதிமாறனின் செலவு ரூ.80 லட்சத்தை எட்டியதாக தேர்தல் பார்வையாளர்கள் கணக்கிட்டனர். இந்த தகவல் தேர்தல் ஆணையத்தில் இணையதளத்திலும் வெளியானது.
நடவடிக்கை பாயுமா?
அப்போதே தயாநிதிமாறன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மத்திய சென்னையில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பிரபாகர் தெரிவித்தார். ஆனால் தயாநிதிமாறன் தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ள செலவு கணக்கு ரூ. பத்து லட்சம்தான்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
வடசென்னையில் எளிமையாக பிரசாரம் செய்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வாசுகி அளித்துள்ள தேர்தல் செலவு கணக்கு ரூ.22 லட்சம். இதில் பாதி அளவைக்கூட காண்பிக்கவில்லை.
டி.கே.எஸ் இளங்கோவன்
தென் சென்னை திமுக வேட்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் 53லட்சம் செலவு செய்துள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் கணக்கு அளித்துள்ளார். ஆனால் தென் சென்னையில் திமுக சார்பில் ரூ.4.90 கோடி செலவு செய்துள்ளதாக கட்சித்தலைமைக்கு சதாசிவம் அளித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சிக்கலில் இளங்கோவன்
இந்த கடித நகல், தேர்தல் ஆணையத்தின் கையில் கிடைத்தால், அடுத்த சில ஆண்டுகளுக்கு டி.கே.எஸ் இளங்கோவன் தேர்தலில் போட்டியிடமுடியாத நிலை உருவாகும் வாய்ப்புள்ளது என்கின்றனர்.