திமுக இளைஞரணி செயலர் பதவிக்கு முட்டி மோதினாரா தயாநிதி? பரபர தகவல்கள்
திமுக இளைஞரணி செயலர் பதவியை தமக்கு தர வேண்டும் என தயாநிதி மாறன் விரும்பியதாக கூறப்படுகிறது. ஆனால் குடும்ப ஆதிக்கம் என்ற விமர்சனத்தை தவிர்க்க ஸ்டாலின் விரும்பியதால் அது நிறைவேறவில்லையாம்.
சென்னை: மு.க.ஸ்டாலின் வசம் இருந்த திமுகவின் இளைஞரணி செயலர் பதவியை தங்களுக்கு தர வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தரப்பும் விரும்பியதாக கூறப்படுகிறது. ஆனால் திமுகவில் குடும்ப ஆதிக்கம் நீடிக்கிறது என்ற சர்ச்சையே வந்துவிடக் கூடாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருந்ததால் இது நிறைவேறவில்லை என்கின்றன அண்ணா அறிவாலய வட்டாரங்கள்.
திமுகவின் செயல் தலைவராகிவிட்டார் ஸ்டாலின். கடந்த சில மாதங்களாகவே செயல் தலைவராகிறார் ஸ்டாலின் என பேசப்பட்டு வந்தது.
செயல்தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்படுவது உறுதியான நிலையில் இளைஞரணி செயலர் பதவியை தங்களுக்கு தர வேண்டும் என தயாநிதி மாறன் தரப்பு விரும்பியதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக கருணாநிதி குடும்பத்தினருடன் தயாநிதி தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி அழுத்தம் கொடுத்தனராம்.
ஆனால் மு.க. ஸ்டாலினோ திட்டவட்டமாக, கடந்த தேர்தலில் நம் மீது வைக்கப்பட்ட விமர்சனமே குடும்ப ஆதிக்கம் கட்சியில் கோலோச்சுகிறது என்பதுதான்.. கூடுமானவரையில் அதை தவிர்க்கத்தான் முயற்சிக்க வேண்டும்.
கட்சிப் பதவிகளில் நம் குடும்பத்தினரே இருந்தால் தொடர்ந்தும் அத்தகைய விமர்சனங்கள் நீடிக்கும். அதிமுகவில் சசிகலா குடும்பத்தினரது ஆதிக்கத்தை விமர்சிக்கும் நிலையில் இருக்கும் நாம் அவர்கள் பதில் தருவதற்கு இடம் தந்துவிடக் கூடாது என்பதுமட்டும்தான் தமது நோக்கம்; வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்று தெளிவாக கூறி சமாதானப்படுத்தியிருக்கிறார்.
இதன்பின்னர் கட்சியிலும் எந்த சிறு குழப்பமும் அதிருப்தியும் வந்துவிடக் கூடாது என்பதற்காக முறைப்படி இளைஞரணி இணைச் செயலராக உள்ள முன்னாள் அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதனை, புதிய இளைஞரணி செயலராக திமுக நியமித்திருக்கிறதாம்.