மதுரை அருகே இறந்து போன கூலித்தொழிலாளி... இறுதிச்சடங்கில் உயிர் பிழைத்த அதிசயம்
மதுரை: மதுரை அருகே இறந்து போனதாக மருத்துவர் கூறிய கூலித்தொழிலாளி இறுதிச்சடங்கு செய்த போது உயிர்பிழைத்ததால் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த பெருமாள்பட்டியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பாண்டித்துரை. இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பாண்டித்துரை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து உறவினர்கள் இறுதி சடங்கு செய்வதற்காக உறவினர்களுக்கு சொல்லி அனுப்பி மாலைகள், வேஷ்டி உள்ளிட்டவை வாங்கி வந்தனர்.
இறந்து விட்ட பாண்டித்துரையின் நெஞ்சில் அடித்து கொண்டு உறவினர்கள் கதறி அழுதனர். அப்போது திடீரென மூச்சு வெளியிட்டபடி பாண்டித்துரை எழுந்து உட்காரவே உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். பலருக்கும் அழுகை நின்று போனது. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது தனக்கு ஏன் மாலை போட்டு அழுகிறார்கள் என்று பாண்டித்துரை யோசிக்க ஆரம்பித்தார்.
இதனையடுத்து உறவினர்கள் உடனடியாக பாண்டித்துரையை மதுரை அரசு மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தற்போது பாண்டித்துரை உடல்நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மதுரை அருகே மாண்டு போனதாக கூறப்பட்ட நபர் உயிருடன் மீண்டது பெருமாள் பட்டி அருகே அதிசயமாக பேசப்படுகிறது