இறுதிச்சடங்குகள் செய்து புதைக்கப்பட்ட புதுவை மனிதர் உயிரோடு வந்த அதிசயம்
புதுவையை சேர்ந்த மாசிலாமணி என்பவர் குடும்பத்தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். காணாமல் போன அவரை அவரது குடும்பத்தார் பல இடங்களில் தேடியுள்ளனர். இந்நிலையில், பதற்றம் அடைந்த அவரது மனைவி டெனிசி கடந்த 23 ஆம் தேதி போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதற்கிடையே, குருசுக்குப்பம் கடற்கரையில் அழுகிய நிலையில் ஆணின் பிணம் ஒன்று கரை ஒதுக்கியுள்ளது. சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டதால், அது மாசிலாமணியாக இருக்கக் கூடும் எனக் கருதிய அவரது குடும்பத்தார், அந்த உடலை வாங்கிச் சென்று இறுதிச் சடங்குகளை செய்தனர்.
மாசிலாமணி இறந்து விட்ட துக்கத்தில் வீடே சோக மயமாக இருந்தபோது, எதிர்பாரத விதமாக கடந்த 25ம் தேதி மீண்டும் வீட்டிற்குத் திரும்பியுள்ளார் மாசிலாமணி. மாசிலா மணி உயிரோடு வந்ததால் அவரது குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
தான் இறந்து விட்டதாகக் கருதி, குடும்பத்தார் இறுதிச் சடங்குகள் செய்து விட்டதைக் கேள்விப் பட்ட மாசிலாமணி, ‘வீட்டில் சண்டை போட்டுக் கொண்டு வேளாங்கண்ணி சென்று விட்டதாகவும், இப்போதுதான் புதுச்சேரி திரும்பியதாக தெரிவித்துள்ளார்.
மாசிலாமணி உயிரோடு திரும்பி வந்து விட்டதால், அவரது குடும்பத்தார் புதைத்த சடலம் யாருடையது என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.