கன்னியாகுமரி கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கும் கடல் ஆமைகள் !
கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடற்கரையில் ஆமைகள் இறந்த நிலையில் அடிக்கடி கரை ஒதுங்குவது அதிகரித்து வரும் நிலையில் நேற்று கடல் ஆமை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரையில் இறந்த நிலையில் சுமார் 60 கிலோ எடைகொண்ட கடல் ஆமை திங்கள்கிழமை கரை ஒதுங்கியது. இதனைப் பார்த்த அப்பகுதி வியாபாரிகள் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, வனத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த ஆமையை வனத் துறையினர் எடுத்துச் சென்றனர்.
கன்னியாகுமரி மற்றும் கோவளம் கடல் பகுதிகளில் அண்மைக்காலமாக 10-க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன. கடந்த மாதம் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் 80க்கும் அதிகமான திமிங்கிலங்கள் உயிருக்குப் போராடிய நிலையிலும், இறந்த நிலையிலும் கரை ஒதுங்கின.
இந்நிலையில், கன்னியாகுமரி கடல் பகுதிகளில் கடல் ஆமைகள் இறந்த நிலையில் அடிக்கடி கரை ஒதுங்கி வருவது குறித்து கண்டறிய வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதேபால் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நேற்று, 20 கிலோ எடையுள்ள, 'ஆலிவ் ரெட்லீ' என்ற அரிய வகையைச் சேர்ந்த, பெரிய கடல் ஆமை காயத்துடன் கரை ஒதுங்கியது. கரைஒதுங்கிய ஆமையை பார்க்க, அங்கிருந்த பொதுமக்கள் கூடினர். ஆமை சிறிது நேரத்தில் இறந்தது. ஆமையின் உடலை கடற்கரையில் மீனவர்கள் புதைத்தனர்.