குட்டி விமானங்கள், நிலநடுக்கத்தை உருவாக்கும் வெடிசப்தம்-மர்மத்தை விளக்க திண்டுக்கல் ஆட்சியரிடம் மனு
திண்டுக்கல் மாவட்டத்தை அதிரவைத்த வெடிசப்தம் குறித்து விளக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே ரெங்கமலை, கருமலை மீது குட்டி விமானங்கள் பறப்பது, ஒட்டுமொத்த மாவட்டத்தை அதிரவைக்கும் வெடிசப்தம் எதனால் ஏற்பட்டது? ஆகியவற்றை விளக்க கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
ரெங்கமலை, கருமலை பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். கனிம வளம் தொடர்பான ஆய்வு என கூறப்படுகிறது.
இதற்காக 2,000 ஏக்கர் நிலத்தில் கற்கள் பதித்துள்ளனர். இவற்றை கையகப்படுத்தப் போகிறார்களோ என்கிற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.
இதனிடையே ரெங்கமலை, கருமலை பகுதிகளில் அடிக்கடி ஆளில்லா குட்டி விமானங்கள் மிக தாழ்வாக பறந்து சென்று பீதியை கிளப்புகின்றன. கடந்த மாதம் 28-ந் தேதி திண்டுக்கல் மாவட்டத்தையே நிலைகுலைய செய்யும் வகையில் மிக பயங்கரமான வெடிசப்தமும் நில அதிர்வும் ஏற்பட்டது.
ரெங்கமலை பகுதியில் மேற்கொள்ளப்படும் ஆய்வில்தான் இவ்வளவு சக்திவாய்ந்த வெடிபொருள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வெடிசப்தம் எதனால் ஏற்பட்டது என்பது குறித்து மக்களுக்கு இதுவரை விளக்கம் தரப்படவில்லை.
இதையடுத்து மாவட்ட குறைதீர்ப்பு கூட்டத்தில் ரெங்கமலை மர்மங்கள் குறித்து மக்களுக்கு விளக்கம் தரக் கோரி ஆட்சியர் வினய்யிடம் பொதுமக்கள் நேற்று மனு அளித்தனர். மாவட்ட நிர்வாகம் உரிய விளக்கம் தராவிட்டால் போராட்டம் நடத்துவோம் எனவும் எச்சரித்துள்ளனர்.