சிக்கலில் "கப்பல் காலேஜ்"... ராகிங்கில் மாணவருக்கு அடி உதை.. தட்டிக் கேட்காத டீன் மீது வழக்கு
சென்னை: சென்னை அருகே ஒரு "கப்பல்" கல்லூரியில் ராகிங் கொடுமையால் அங்கு ஒரு மாணவன் அடித்து உதைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காத கல்லூரி டீன் மற்றும் ராகிங்கில் ஈடுபட்ட 7 மாணவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அந்தக் கல்லூரியின் பெயர் ஐஎம்ஏ சர்வதேச கப்பல் தொழில்நுட்பக் கல்லூரி என்பதாகும். வெளிநாடுகளைச் சேர்ந்த வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம் படிக்கின்றனர். ஜமீன் கொரட்டூர் பகுதியில் இந்த கல்லூரி உள்ளது.
இங்கு ஈரோடு, ராசப்பாளையத்தை சேர்ந்த சரவணபிரபு (20) என்பவர் கல்லூரி விடுதியில் தங்கி 2ம் ஆண்டு படித்து வருகிறார். அவரிடம் சீனியர் மாணவர்கள் சிலர் அடிக்கடி ராகிங்கில் ஈடுபட்டு வந்தனர். இதனை சரவண பிரபு கண்டித்ததால் மோதல் ஏற்பட்டு வந்தது. கடந்த மாதம் 19ம் தேதி விடுதி அறையில் இருந்த அவரிடம் சீனியர் மாணவர்கள் ராகிங்கில் ஈடுபட்டனர். அப்போது சிகரெட் புகையை சரவண பிரபு முகத்தில் ஊதியதாக தெரிகிறது. இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த மாணவர்கள் சரவண பிரபுவை சரமாரியாக அடித்துள்ளனர். இதில் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்து அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து கல்லூரி டீனிடம் புகார் கொடுத்தார் சரவண பிரபு. கல்லூரி நிர்வாகத்திடமும் புகார் கொடுத்தார். ஆனால் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், இதில் தொடர்புடையவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து கல்லூரி டீன் மேத்யூ ஜேக்கப், மாணவர்கள் தீனதயாளன், லோகநாதன், மாங்குடி ரூபேஷ், ஸ்ரீநாத் பால், தனசேகர், ராஜசேகரன், அபிஷேக், தினேஷ்ராஜ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
விசாரணைக்குப் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
கல்லூரி டீனே ராகிங்குக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் கப்சிப் என்று இருந்த செயல் அனைவரையும் அதிர வைத்துள்ளது. இந்த கல்லூரி நிர்வாகம் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.