காலியாக உள்ள டீன் பணியிடங்கள் - சமாளிக்க திணறும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள்
தென்மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் டீன் பதவி காலியாக இருப்பதால் நிர்வாக பிரச்சனைகள் எழுந்துள்ளது.
நெல்லை : டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் டீன் பணியிடம் காலியாக இருப்பதால் நிலவரத்தை சமாளிக்க அரசு மருத்துவனைகள் திணறி வருகின்றன.
2012ம் ஆண்டிற்கு பின்னர் நடப்பாண்டில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இந்த மாவட்டத்தில் இருந்து கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 33 பேர் டெங்கு காய்ச்சலால் பலியாகி உள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்டோர் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலுக்கு நெல்லை மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் பலர் 15 வயதுக்கு உள்பட்ட சிறுவர், சிறுமிகள் ஆவர். இது போல் இரு மாவட்டத்திலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஏராளமானோர் காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் நெல்லை மருத்துவ கல்லூரி, தூத்துக்குடி மருத்துவ கல்லூரி, மதுரை மருத்துவ கல்லூரி ஆகியவற்றில் டீன் பணியிடம் காலியாக உள்ளது. இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் டீன் பணியிடம் காலியாக இருப்பதால் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது என தெரியாமல் டாக்டர்கள் விழிபிதுங்கி வருகின்றனர். இந்த மருத்துவ கல்லூரிகளில் உடனடியாக டீன்களை நியமிக்க அவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.