டெல்லி செங்கோட்டை தாக்குதல்: தூக்கு கைதி முகமது ஆரிப் மறுசீராய்வு மனு சுப்ரீம்கோர்ட்டில் ஏற்பு!!
டெல்லி: டெல்லி செங்கோட்டை தாக்குதல் வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு எதிராக முகமது ஆரிப் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
டெல்லி செங்கோட்டையில் 2000-ம் ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 2 இந்திய ராணுவ வீரர்கள் உள்பட 3 பேர் பலியாகினர். இத் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி முகமது ஆரிப்புக்கு விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.
இந்த தண்டனையை டெல்லி உயர்நீதிமன்றமும் பின்னர் உறுதி செய்தது. ஆனால் தமக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து முகமது ஆரிப் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ந் தேதி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து ஆரிப்பின் தூக்கு தண்டனையை உறுதிசெய்தது. ஆனால் 14 ஆண்டுகாலம் ஆயுள் தண்டனை அனுபவித்துவிட்டபடியால் தமக்கு தூக்கு தண்டனை விதிக்கக் கூடாது என ஆரிப் மீண்டும் ஒரு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த 2014-ம் ஆண்டு ஆரிப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை மட்டும் விதித்தது. இறுதி விசாரணையில் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி ஆரிப் தாக்கல் செய்த மறுஆய்வு மற்றும் திருத்தம் கோரும் மனுக்கள் உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.
தமது தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுக்களை நிராகரித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஆரிப் மீண்டும் மறுசீராய்வு மனுதாக்கல் செய்தார். இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆரிப்பின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.