ஓரின சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை.. மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு
மதுரை: அமெரிக்காவின் ஆர்லான்டோவில் ஓரின சேர்க்கையாளர் கிளப்பில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட 49 பேர் கொலை செய்யப்பட்ட அதே தினத்தில், மதுரையில் ஓரின சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை விதிக்க இந்திய அரசை வலியுறுத்தி முஸ்லிம் அமைப்பு ஒன்று ஒட்டியிருந்த போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்லது.
ஆர்லான்டோ நகரிலுள்ள பல்ஸ் என்ற நைட் கிளப்பில் உமர் மதீன் என்பவர் துப்பாக்கி சூடு நடத்தி 49 பேரை கொன்று குவித்தார். பாதுகாப்பு படையினர் சுட்டதில் மதீன் உயிரிழந்தார்.
இந்த தாக்குதலை தாங்கள்தான் நடத்தியதாக ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இந்த பரபரப்புக்கு நடுவே மதுரையில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மரண தண்டனை
இந்த போஸ்டரில், "இந்திய அரசே, ஓரினச்சேர்க்கை, தனிமனித சுதந்திரம் என்ற பெயரால் சட்டமாக்க நினைப்பதை கைவிடு. ஓரினச்சேர்க்கைக்கு இ.பி.கோ.377 பிரிவின்கீழ் வழங்கும் ஆயுள் தண்டனையை, மரண தண்டனையாக மாற்று. தமிழக அரசே, ஓரினசேர்க்கையை வலியுறுத்தி போராடும் கலாச்சார பயங்கரவாதிகளை கைது செய்". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அச்சம்
இந்த போஸ்டர் மரண தண்டனையை வலியுறுத்துவதால், மதுரையிலுள்ள ஓரின சேர்க்கை ஆதரவாளர்கள் அச்சத்திலுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பழைய போஸ்டராச்சே
அதேநேரம், போஸ்டரிலுள்ள இஸ்லாமிய அமைப்பு இப்போது அதை ஒட்டவில்லை என மறுத்துள்ளது. 2013ம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட போஸ்டர் என்று அந்த அமைப்பு ஊடகம் ஒன்றிடம் தெளிவுபடுத்தியுள்ளது.
இப்போதுதான் ஒட்டப்பட்டது
இதுகுறித்து ஓரினச்சேர்க்கை ஆதரவு போராட்டக்காரர் கோபி சங்கர் கூறுகையில், "இதுபோன்ற போஸ்டர் ஒட்டப்படுவது புதிது கிடையாது. ஓரினச்சேர்க்கையை கிரிமினல் குற்றம் என கருத முடியாது என சுப்ரீம் கோர்ட் சொன்னபோதும் போஸ்டர் ஒட்டினார்கள். அமெரிக்க துப்பாக்கி சூடுக்கு அடுத்த நாளே, அமெரிக்கன் கல்லூரி எதிரே மீண்டும் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
விசாரிக்க உறுதி
இந்த விவகாரம் குறித்து காவல்துறையில் புகார் அளித்தாலும், வழக்குப்பதிவு செய்ய சட்டப்பிரிவுகள் இல்லாத காரணத்தை போலீசார் கூறி கைவிரிப்பதாக கோபி சங்கர் தெரிவிக்கிறார். தனக்கு இதுகுறித்து இதுவரை தகவல் வரவில்லை எனவும், இனிமேல் விசாரிப்பதாகவும் போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் உறுதியளித்துள்ளார்.