நெல்லை அருகே சிறுவனை கொன்றவருக்கு தூக்கு.. மாவட்ட நீதிமன்றம் அதிரடி
நெல்லை அருகே சிறுவனை கொன்றவருக்கு மாவட்ட முதன்மை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
நெல்லை: சிறுவனை கொன்றவருக்கு மாவட்ட முதன்மை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியது.
நெல்லை மாவட்டம் பேட்டை சுந்தரவிநாயகர்கோவில் தெருவை சேர்ந்தவர் இசக்கியப்பன் (38),பிரேமா (32) தம்பதியினர். இவர்களுக்கு கல்பனா (12) என்ற மகளும் தருண் மாதவ் (5) என்ற மகனும் உள்ளனர்.
இசக்கியப்பன் கத்தார் நாட்டில் பணிபுரிந்தார். மனைவி மற்றும் குழந்தைகள் பேட்டையில் வசித்து வருகின்றனர். இசக்கியப்பன் உறவினரான ஆறுமுகம் என்பவரும் அவர்கள் வீட்டருகே வசித்து வருகிறார்.
நடத்தையில் சந்தேகம்
ஆறுமுகத்துக்கும் பிரேமாவின் உறவினர் பெண்ணுக்கும் திருமணம் நடந்து குழந்தையும் பிறந்துள்ளது. ஆனால் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த ஆறுமுகம் அடிக்கடி அவருடன் வாக்குவாதம் செய்து வந்துள்ளார்.
கோபித்து சென்ற மனைவி
குழந்தையையும் தன்னுடைய குழந்தை இல்லை எனக்கூறி ரோட்டில் வீசி விட்டார். எனவே ஆறுமுகத்தின் மனைவி கோபித்து கொண்டு மும்பை சென்று விட்டார்.
சிறுவன் கொலை
இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 8 ம் தேதி தனது குழந்தையை பள்ளியிலிருந்து அழைத்து வந்து கொண்டிருந்த பிரேமாவை தெருவில் வழிமறித்து அவரையும் குழந்தை தருண் மாதவ்வையும் ஆறுமுகம் வெட்டியுள்ளார். இதில் 5 வயது சிறுவனான தருண் உயிரிழந்தார்.
விசாரணை
பிரேமா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார். இது தொடர்பாக பேட்டை போலீசார் வழக்கு பதிந்து நெல்லை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.
தூக்கு தண்டனை
இதில் இன்று குற்றவாளி என நிருபிக்கப்பட்ட ஆறுமுகத்திற்கு துாக்கு தண்டணை விதித்து நீதிபதி அப்துல்காதர் தீர்ப்பு வழங்கினார். மேலும், கொலையாளி ஆறுமுகத்திற்கு 5 லட்சத்து 10 ஆயிரம் அபராத தொகையையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.