விலகியது டோர்னியர் மர்மம்... பிச்சாவரம் அருகே கடலில் 950 மீ. ஆழத்தில் உடைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு.
சென்னை : கடந்த மாதம் 8ம் தேதி ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது மாயமான டோர்னியர் ரக விமானத்தின் உடைந்த பாகங்கள் பிச்சாவரம் அருகே கடலில் 950 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து கடந்த மாதம் 8-ந் தேதி புறப்பட்டுச் சென்ற இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான டோர்னியர்' விமானம் 3 பேருடன் மாயமானது. இதையடுத்து, அதி நவீன கப்பல் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் மூலம் தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் விமானத்தின் உடைந்த பாகங்கள் கடலூர் பிச்சாவரத்தில் இருந்து 16.5 கடல் மைல் தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், 950 மீட்டர் ஆழத்தில் உள்ளதாக கடலோர பாதுகாப்புப் படையின் கிழக்கு மண்டல ஐ.ஜி. சர்மா தெரிவித்துள்ளார்.
மேலும், விமானத்தை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார். விமானத்தின் கருப்பு பெட்டியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனை மீட்டால் தான் விமான விபத்துக்கான காரணம் தெரியவரும்.
விமானம் மாயமாகி 32 நாட்களுக்குப் பிறகு அதன் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத்து, அதில் சென்ற விமானி வித்யாசாகர், எம்.கே.சோனி மற்றும் சுபாஷ் சுரேஷ் ஆகியோரின் கதி என்ன என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.