என்னய்யா மதம்... எல்லோரையும் சேர்த்து வைத்த இந்த ''டிசம்பர் 6''!
சென்னை: டிசம்பர் 6... நேற்றைய தினம் ஒவ்வொரு ஆண்டும் ஒட்டுமொத்த இந்தியாவிலும், தலைநகர் சென்னையிலும் பீதியைக் கிளப்பும் நாள். போலீசார் ஆயிரமாயிரமாக பாதுகாப்பு பணியில் குவிக்கப்படும் நாள்.
ஒவ்வொரு வருடமும் பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6ம் தேதியன்று சென்னை ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என்று அனைத்து முக்கிய இடங்களும் போலீசாரால் சூழப்பட்டு பாதுகாப்பு பணிகளில் அல்லோகலப்படும். இந்த வருடமோ ஒட்டுமொத்த போலீசாரும் மீட்புப் பணியில்தான் மும்முரமாக்கப்பட்டுள்ளனர்.
நீண்டது உதவிக்கரம் மட்டுமே:
இந்த வருட டிசம்பர் 6 சென்னையில் மட்டும் இதுவும் மற்றொரு நாளே என்று அனைத்து வேறுபாடுகளையும் களைந்து ஒருவருக்கொருவர் உதவிக்கரம் நீட்ட வைத்துள்ளது. சற்று கூட அந்த இருட்டு நாளின் சாயல் படியாமல் ஒருவருக்கொருவர் விளக்கினை தங்கள் உள்ளத்தினுள் ஏற்றி வைத்துக் கொண்டுள்ளனர் நேற்று.
எல்லாமே மனதின் எண்ணம்தான்:
ஒருவகையில் யாரோ இரண்டு, மூன்று தவறான மனம் கொண்டவர்களுக்கு பயந்து ஒரு நாளையே நாம் தேவையில்லாத விழிப்புணர்வுக்குரியதாக மாற்றிவிட்டோமோ என்று தோன்ற வைத்துள்ளது இந்த மழை. அப்படிப்பட்ட புகைப்படங்கள்தான் சமூக வலைதளங்களிலும் பரவி வருகின்றது.
எதுவும் தடையில்லை:
அனைத்து மத, இன வேறுபாடுகளையும் கடந்து மனிதம் மட்டுமே நிலைத்து நிற்கின்றது. உணவுப் பொட்டலங்கள் விநியோகிப்பதில் ஆகட்டும், ஆடைகள், அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு சேர்ப்பதில் ஆகட்டும் மதமோ, ஜாதியோ, இனமோ, மொழியோ தடையாக இருக்கவில்லை.
தள்ளி நில்லுங்கள் தயவு செய்து:
இதில் அரசியல் சதுரங்கங்கள் மட்டுமே விதிவிலக்கு. இனியேனும், டிசம்பர் 6ஆம் தேதியினை சாக்காய் வைத்து அரசியல் செய்பவர்கள் ஒழிந்தே போகட்டும். உண்மைதான் ஒரு டிசம்பர் 6 பிரித்து வைத்தது...மற்றொரு டிசம்பர் 6 இணைத்து வைத்துள்ளது!