மரபணு மாற்ற பயிர் சோதனைக்கு வைகோ கடும் எதிர்ப்பு
சென்னை: மரபணு மாற்றுப் பயிர்கள் சோதனைக்கு அனுமதியளித்துள்ள மத்திய அரசு முடிவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: மரபணு மாற்றுப் பயிர்களை சோதனை அடிப்படையில் அனுமதிக்க முடிவெடுத்துள்ள மத்திய அரசு, அதற்கான மரபணு மாற்று விதை கொண்டுவரும் களப்பணிக்கு உத்தரவிட்டுள்ளது கடும் அதிர்ச்சி அளிக்கிறது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, மரபணு மாற்றப்பட்ட பி.டி.கத்தரி சாகுபடிக்கு அனுதி அளித்தபோது, கடும் எதிர்ப்பு கிளம்பியது. மரபணு பயிர்கள் தொடர்பாக அப்போதைய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் பெங்களூரில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தியபோது, மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பொள்ளாச்சி கிருஷ்ணன், மாநில இளைஞர் அணிச் செயலாளர் வே.ஈஸ்வரன் ஆகியோர் அக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
மரபணு பயிர்களினால் ஏற்படும் எதிர்விளைவுகளை சுட்டிக்காட்டி பி.டி.கத்தரிக்கு அனுதி தரக்கூடாது என்று கோரிக்கை அட்டைகளை ஏந்தி எதிர்ப்பைப் பதிவு செய்தனர். 2010ம் ஆண்டு பிப்ரவரியில் மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ், பி.டி.கத்தரியை வர்த்தக பயன்பாட்டிற்காக பயிரிடுவதை நிறுத்தி வைக்க அரசு தீர்மானித்துள்ளதாக அறிவித்தார்.
பிலிப்பைன்ஸ் தீவுகளில் சிடியோ கல்லாங்க் என்னும் கிராமத்தில் அரசு ஆதரவுடன் பி.டி.மக்காச் சோளம் விதைக்கப்பட்டது. பயிரின் பூக்கும் பருவத்திலேயே அதன் பாதிப்புத் தெரிந்தது. வயலில் வேலை செய்தவர்களுக்கும் அருகில் வசித்தவர்களுக்கும் காய்ச்சலும், முக வீக்கமும், மூச்சு திணறலும், இனம் தெரியாத அழுத்தமும் ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் இரத்தம் பரிசோதிக்கப்பட்டபோது, பி.டி.மரபணு உருவாக்கும் நஞ்சை எதிர்க்கும் இராசாயனங்கள் இரத்தத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதே நிலைமை இந்தியாவில் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் அருகே நிர்மல் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கும் ஏற்பட்டது.
உலகின் பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் மூலம் பி.டி. மரபணு பயிர்களால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், உடல் நலக் கேடுகள் மட்டுமின்றி, இயற்கையின் உயிர்ச் சூழல் பண்மை அழிந்து, சுற்றுச் சூழலும் அழிந்துவிடும் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டிருக்கின்றன.
பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களான, ‘மாஹிகோ' மற்றும் ‘மோன்சான்டோ' போன்றவை மரபணு மாற்று விதைகளை உருவாக்கி, அதை உலகம் முமுவதும் விற்பனை செய்து, கொள்ளை இலாபம் ஈட்டத் திட்டமிட்டுள்ளன. அதிக விளைச்சல் தரும் என்று விவசாயிகளிடம் பி.டி.பருத்தியை அறிமுகம் செய்த இந்த நிறுவனங்களின், பி.டி. பருத்தி இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் விளைச்சல் இன்றி நிலத்தை பாழ்படுத்திவிட்டன.
மிகபெரிய மக்கள் தொகை உள்ள இந்தியாவில், தற்போது கத்தரி, மக்காச்சோளம், சோயா, எள், தக்காளி, வெண்டை போன்ற மரபணு மாற்றுப் பயிர்களைத் திணித்து பி.டி.விதைகள் விற்பனை சந்தையாக ஆதிக்கம் செலுத்த முனைகின்றன.
மக்கள் நலனுக்கு கேடு செய்யும் ‘மாஹிகோ, மான்சான்டோ' நிறுவனங்களின் சூழ்ச்சி வலையில் இந்திய அரசு சிக்கிவிடக்கூடாது. மரபணு மாற்றுப் பயிர்களின் எதிர் விளைவுகள் பற்றிய கருத்துகளை கவனத்தில் கொண்டு, மரபணு மாற்றுப் பயிர்கள் சோதனை முறையில் சாகுபடி செய்வதற்கு வழங்கிய அனுமதியை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.