திமுக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு ராஜினாமாவா? 'சஸ்பென்ஸ்' என புதிர்போட்ட மு.க ஸ்டாலின்
நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: திமுக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்வார்களா என்ற கேள்விக்கு திமுக செயல் தலைவர் சஸ்பென்ஸ் என புதிரான பதிலை அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் திமுக எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு ஸ்டாலின் தலைமை வகித்தார்.,
இக்கூட்டத்தில் சபாநாயகர், முதல்வர், ஆளுநர் ஆகியோரைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:
சட்டசபையில் எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால் ஆட்சி கவிழ்ந்து விடுமா என்பது கேள்வி கேட்கும் உங்களது ஆசை. நீதிமன்றத்தில் நாளை என்ன முடிவு வருகிறது என்பது தெரிந்த பிறகு எங்களுடைய நடவடிக்கை இருக்கும்.
நாங்கள் சொல்ல கூடாதா?
எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், அவர்களுடன் கலந்து பேசி எடுத்துள்ள முடிவை நான் ஏற்று அறிவிப்பேன் என்றுதான் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். தினகரன் தரப்பும் ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்கிறார்கள். அதனால் நாங்கள் அதை சொல்லக் கூடாதா?
சட்டவிரோத நடவடிக்கை
இந்த ‘குதிரை பேர' ஆட்சி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலையில், துணை முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 11 எம்.எல்.ஏ.க்கள் இந்த அரசுக்கு எதிராக வாக்களித்து, செயல்பட்டபோது நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது 18 பேர் மீது மட்டும் அரசியல் சட்ட விரோதமாக நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.
தேர்தலை சந்திக்க தயார்
எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் சந்திக்க திமுக தயாராக இருக்கிறது. இந்த ஆட்சியை அப்புறப்படுத்த மக்களும் தயாராக இருக்கிறார்கள். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
சஸ்பென்ஸ்
அப்போது செய்தியாளர் ஒருவர், ஆளுநர் பெரும்பான்மையை நிரூபிக்க உத்திரவிடாவிட்டால் திமுக கூண்டோடு ராஜினாமா செய்யுமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஸ்டாலின், உங்களுடைய பெருந்தன்மையான ஆலோசனைக்கு நன்றி. நாளை நீதிமன்றத்தின் முடிவு தெரிந்த பிறகு நாங்கள் ஆலோசித்து முடிவெடுப்போம். இப்போதே எல்லாவற்றையும் சொல்ல முடியாது. சொன்னால் அதில் சஸ்பென்ஸ் இருக்காது என்றார்.