பெங்களூருவை பாதுகாப்பற்ற பகுதியாக அறிவிக்க வேண்டும்.. தா.பாண்டியன் வலியுறுத்தல்
சென்னை: பெங்களூரு நகரத்தில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வருவதால் அந் நகரத்தை பாதுகாப்பற்ற பகுதியாக அறிவிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா. பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெங்களூர், மாண்டியா உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதனிடையே வரும் 20 ம் தேதி வரை வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாக இல்லாததால் இந்த பேராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. பெங்களூரில் வசிக்கும் தமிழக மக்களின் கடைகள் மற்றும் வீடுகளை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கி வருகின்றனர்.
தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் தாக்கப்பட்டு தீ வைக்கப்படுகின்றன. மேலும் கே.பி.என், எஸ்.ஆர்.எஸ். நிறுவனத்துக்கு சொந்தமான 65 பேருந்துகளை தீ வைத்து கொளுத்தினர் கன்னடர்கள். இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் கூறுகையில், " பெங்களூரில் தொடர்ந்து பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளது. இதனால் அங்கு மக்கள் வாழ்வதற்கு சூழ்நிலை இல்லாத நிலையே தற்போது உருவாகியுள்ளது.
எங்கு பார்த்தாலும் வன்முறை சம்பவம், மற்றும் மக்கள் மிகவும் பீதியடைந்து உள்ளனர். இதனால் பெங்களூருவை பாதுகாப்பற்ற நகரமாக அறிவிக்க வேண்டும்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.