”ஆசை” பட பாணியில் பெண் கொடூரக் கொலை.. நாகர்கோவிலில்!
சுசீந்திரம்: நாகர்கோவில் அருகே கை, கால்களை கட்டி பாலிதீன் கவரால் பெண் முகத்தை இறுக்கி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை செட்டித் தெருவை சேர்ந்தவர் மோகன். ஓசூரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஓசூரில் வசித்து வருகிறார்.
இவருக்கு சொந்தமாக நாகர்கோவில் அடுத்த பறக்கை தெற்கு கண்ணங்குளம் பகுதியில் 2 அடுக்கு மாடியுடன் கூடிய வீடு உள்ளது. மோகனின் மாமனார் சுடலையாண்டி என்பவர் இதை பராமரித்து வருகிறார். இந்த வீட்டை தற்போது வாடகைக்கு விட்டுள்ளனர். மேல் தளத்தில் கோமு என்ற பெண் தனது தந்தையுடன் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவிலில் உள்ள பிரபல கல்வி நிறுவன அலுவலகத்தில் ஊழியராக உள்ளார். கோமுவுக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை. இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன் இந்த வீட்டுக்கு வந்துள்ளார்.
கீழ் தளத்தில் உள்ள வீடு காலியாக இருந்தது. இந்த வீட்டுக்கு கடந்த 12 ஆம் தேதி மருங்கூரை சேர்ந்த அகிலேஷ் என்ற அஜய் என்பவர் வாடகைக்கு வந்து உள்ளார். ரூபாய் 25 ஆயிரம் அட்வான்ஸ் தொகையும், ரூபாய் 3,500 வாடகையும் பேசி புரோக்கர் ஒருவர் மூலம் மோகனிடம் பணத்தை கொடுத்து அவர் வாடகைக்கு வந்து குடியேறினார்.
அப்போது மோகனிடம் நானும், எனது மனைவியும் மட்டும் தான் இருக்கிறோம். வேறு யாரும் இல்லை என தெரிவித்து உள்ளார். இதை நம்பி மோகனும், வீட்டை வாடகைக்கு கொடுத்தார். இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக வீடு பூட்டியே கிடந்தது. வீட்டில் இருந்து துர்நாற்றமும் வீசியது. இதையடுத்து மேல் தளத்தில் குடியிருந்து வரும் கோமு, சுடலையாண்டியை போனில் தொடர்பு கொண்டு கீழ் தளத்தில் உள்ள வீடு பூட்டியே கிடக்கிறது. உள்ளே இருந்து துர்நாற்றம் வருகிறது என கூறி உள்ளார். அப்போது அவர் அந்த வீட்டில் இருந்த பெண்ணின் தாயாருக்கு உடல் நிலை சரியில்லை என பார்க்க சென்று உள்ளனர். வீட்டுக்குள் ஏதாவது எலி இறந்து கிடக்கும் என கூறி விட்டார்.
இதற்கிடையே நேற்று காலையில் துர்நாற்றம் மிக அதிகமாக வீசியது. உடனடியாக கோமு மற்றும் பக்கத்தில் இருந்தவர்கள் சுடலையாண்டிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வீட்டுக்கு அட்வான்ஸ் தொகை அளித்த அஜய், செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டார். அப்போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. உடனடியாக அவர் சுசீந்திரம் காவல் நிலையத்துக்கு சென்று தகவல் தெரிவித்தார். இதையடுத்து சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் ராஜ்பால் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
மாற்று சாவியை வைத்து வீட்டை திறந்ததும் துர்நாற்றம் மிக அதிகமாக இருந்தது. வீடு முழுவதும் போலீசார் தேடிய போது, வீட்டின் சமையல் அறை பகுதியில் ஊதா நிற பிளாஸ்டிக் தார்ப்பாயில் பெண்ணின் உடல் ஒன்று கட்டி வைக்கப்பட்டு இருந்தது. உடல் அழுகி சமையல் அறை முழுவதும் கழிவு நீர் வடிந்து இருந்தது. உடனடியாக தார்ப்பாயை அவிழ்த்து உடலை எடுத்தனர்.
மிகவும் அழுகிய நிலையில் இருந்த அந்த பெண்ணின் சடலத்தில், முகத்தில் தனியாக பிளாஸ்டிக் கவர் இருந்தது. கை, கால்கள் கட்டப்பட்டு இருந்தன. இது பற்றி தகவல் அறிந்ததும் எஸ்.பி. தர்மராஜன், டி.எஸ்.பி. நந்தக்குமார் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். இறந்த பெண்ணின் பெயர் விவரம் எதுவும் உடனடியாக தெரிய வில்லை. வீட்டின் உரிமையாளர் மோகனை தொடர்பு கொண்ட போது, அவர் அஜய் என்ற பெயர் மட்டும் தான் தெரியும். வேறு விவரங்கள் தெரியாது என்றார்.
வீட்டை பராமரித்து வந்த சுடலையாண்டிக்கும் அஜய் செல்போன் நம்பரை தவிர வேறு எதுவும் தெரிய வில்லை. அந்த செல்போன் நம்பரும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. வீடு முழுவதும் போலீசார் தேடினர். வேறு எந்த தடயங்களும் கிடைக்க வில்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்த போதும், எந்த விவரமும் தெரிய வில்லை.
இதையடுத்து பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோப்ப நாய் ஏஞ்சலின் வரவழைக்கப்பட்டும் சோதனை நடந்தது. அந்த பெண்ணின் முகத்தை பிளாஸ்டிக் கவரால் மூடி, கை, கால்களை கட்டி, கழுத்தை இறுக்கி கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால், கொலை நடந்து 5 நாட்கள் வரை ஆகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.