மறு ஆய்வுக்கு வரும் தீனதயாளன் சிலைகள்.. கூட்டாளியிடம் சிக்கிய 9 சிலைகள் கோர்ட்டில் ஒப்படைப்பு
சென்னை: சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை மறு ஆய்வு நடத்த தொல்லியல்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மாமல்லபுரத்தில் தீனதயாளன் கூட்டாளி லட்சுமி நரசிம்மனிடம் பறிமுதல் செய்யப்பட்ட 9 ஐம்பொன் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டன.
சென்னை ஆழ்வார்பேட்டை முர்ரேஸ் கேட் சாலையில் வசித்த தொழிலதிபர் தீனதயாளன் வீட்டில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் அண்மையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, 285 பழங்கால சிலைகள், ஓவியங்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் தீனதயாளன் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், மாமல்லபுரத்தைச் சேர்ந்தவரும், தீனதயாளன் கூட்டாளியுமான லட்சுமி நரசிம்மனின் கலைக் கூடத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 24ம் தேதி சோதனை செய்து அவரது வீட்டில் இருந்த 9 ஐம்பொன் சிலைகளை கைப்பற்றியதோடு, லட்சுமி நரசிம்மனையும் கைது செய்தனர்.
சர்வதேச சிலைக்கடத்தல் கும்பல்
சர்வதேச சிலை கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய தீனதயாளன் வீட்டில் இருந்து 200க்கும் மேற்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்ட தீனதயாளன், அவரது கூட்டாளிகள் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
9 ஐம்பொன் சிலைகள்
கடந்த வெள்ளிக்கிழமையன்று லட்சுமி நரசிம்மன் வீட்டிலிருந்து ராஜகோபாலசாமி, பாமா, ருக்மணி, சிவகாமசுந்தரி, திரிபுரசுந்தரி உள்ளிட்ட ஐம்பொன்னால் ஆன 9 சிலைகளை போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக லட்சுமிநரசிம்மனையும் கைது செய்தனர்.
சிலைகள் ஒப்படைப்பு
தீனதயாளனிடம் இருந்து பறிமுதல் செய்த சிலைகளை நீதிமன்றத்தில் போலீசார் ஒப்படைத்து வருகின்றனர். இதுவரை 55 சிலைகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு மையம்
இதேபோல லட்சுமி நரசிம்மனிடம் பறிமுதல் செய்யப்பட்ட 9 சிலைகளையும் எழும்பூர் 10வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் திங்கள்கிழமை போலீசார் ஒப்படைத்தனர். நீதிமன்றம், 9 ஐம்பொன் சிலைகளையும் திருவொற்றியூரில் அரசு சிலைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டது. இதனையடுத்து திருவொற்றியூர் கோவிலில் உள்ள சிலைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
ஜாமீன் கேட்டு மனு
இதனிடையே சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தொழில் அதிபர் தீனதயாளனும், அவரது நண்பர் லட்சுமி நரசிம்மனும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் ஜாமீன் கேட்டு சென்னை எழும்பூர் 2வது நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
சிலைகள் மறு ஆய்வு
இந்த நிலையில் தீனதயாளனிடம் பறிமுதல் செய்த சிலைகளை மீண்டும் ஆய்வு செய்ய தொல்லியல் துறை முடிவு ஆழ்வார்ப்பேட்டை வீட்டில் கைப்பற்றப்பட்ட நூற்றுக்கணக்கான சிலைகளின் மதிப்பு, வயது குறித்து 2வது முறையாக ஆய்வு நடத்தப்படவுள்ளது.சொல்லியல் துறையின் தென் மண்டல இயக்குநர் சத்தியாபாமா தலைமையிலான 10 பேர் கொண்ட குழு ஆய்வு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.