தானே புயலைப் போல கடுமையான சேதம் வந்துருமோ... அச்சத்தில் கடலூர்
கடலூர்: வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் நிலையில் தானே புயலைப் போல கொடூர சேதத்தை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சத்தில் கடலூர் மாவட்ட மக்கள் உறைந்து போயுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தை தலைகீழாக புரட்டிப் போட்டது 2011ஆம் ஆண்டு தானே புயல்.. இன்னமும் தானே புயலின் பாதிப்பில் இருந்து கடலூர் மாவட்டம் முழுமையாக மீளவில்லை.
இந்த நிலையில் புதுச்சேரி அருகே வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள புதிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மையத்தால் கடலூரில் பலத்த காற்றும் கனமழையும் கொட்டி வருகிறது. அம்மாவட்டத்தில் நேற்று இரவு முதலே மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
வீராணம், வாலஜா போன்ற ஏரிகள் முழுமையாக நிரம்பிவிட்டன. கடல் ஆக்ரோசத்துடன் சீற்றமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
கடலூரில் தற்போதைய நிலவரப்படி 72 கி.மீ. வேகத்துக்கு பயங்கர காற்று வீசுகிறது. இதனால் பல இடங்களில் மரங்களும் மின்கம்பங்களும் வேரோடு சாய்ந்துவிட்டன.
பொங்கலையொட்டி பயிரிடப்பட்டுள்ள பன்னீர்கரும்புகள் சாய்ந்துவிட்டன. முந்திரி மரங்களும் பல மரங்களும் இந்த பயங்கர காற்றைத் தாக்குப் பிடிக்காமல் சாய்ந்து வருவது விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனால் எங்கே மீண்டும் தானே புயலைப் போல பலத்த சேதத்தை எதிர்கொள்ள நேரிடுமோ என்ற அச்சத்துடனேயே இருக்கின்றனர் கடலூர் மாவட்டவாசிகள்.