வங்கக் கடலில் புயல்... சென்னை, புதுச்சேரியில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டதை அடுத்து சென்னை, புதுச்சேரி, பாம்பன் துறைமுகங்களில் 1ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னை: வடகிழக்கு பருவமழை காலத்தில் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலங்களினால் கனமழை கொட்டும். ஒரு ஆண்டிற்குத் தேவையான தண்ணீர் பிரச்சினையை ஈடு செய்வது வடகிழக்குப் பருவமழைதான். இந்த ஆண்டு அக்டோபர் 29ம் தேதி மழை தொடங்கினாலும், புயலோ, காற்றழுத்த தாழ்வு மண்டலமோ ஏற்பட்டு மழை பெய்யவில்லை.
நவம்பர் மாதத்தில் பகலில் வெயிலும், இரவில் கடுங்குளிரும் தாக்கி வருகிறது. மழையை எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருக்கிறது.
அது, 48 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, வடமேற்கு திசை நோக்கி நகரும். இதன் காரணமாக டிசம்பர் 1ம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் எச்சரிக்கை விடுத்தார்.
வங்கக் கடலில் 'நடா' புயல்
வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு நடா என்று பெயர் சூட்ட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் 2ம் தேதி சென்னை - வேதாரண்யம் இடையே புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
புயல் எச்சரிக்கை கூண்டு
வானிலை மையத்தில் புயல் எச்சரிக்கையை அடுத்து சென்னை, புதுச்சேரி, பாம்பன் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது சென்னையில் கடந்த நவம்பர் 30ம் தேதி நள்ளிரவு தொடங்கி டிசம்பர் 2ம் தேதி அதிகாலை வரை நூற்றாண்டுகளில் பெய்யாத மழை பெய்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அச்சம் வேண்டாம்
இந்த ஆண்டு புயல் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டாலும் கடந்த ஆண்டைப் போல வெள்ளம் வர வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வாளர்கள் ஆறுதல் செய்தி கூறியுள்ளனர். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவத்தில் இதுவரை 10 சதவீதம் அளவுக்குத்தான் மழை பெய்துள்ளது. நவம்பர் மாதத்தில் மழை சொல்லிக்கொள்ளும்படியாக பெய்யவில்லை.
கடுங்குளிர்
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கடுமையான குளிர்காற்று வீசியது. அதனால் பனிப் பொழிவும் அதிகமாக காணப்பட்டது. குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு தமிழகத்தில் மழையும் பெய்யவில்லை. டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால் சென்னைவாசிகள் சற்றே ஆறுதல் அடைந்துள்ளனர்.