நெருங்கும் பாய்லின்: பாம்பன், புதுச்சேரியில் 2எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
ராமேஸ்வரம்: அந்தமான் அருகே வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியுள்ளதால் பாம்பன் துறைமுகத்தில், புதுச்சேரி துறைமுகத்திலும் 2ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அந்தமான் அருகே வங்கக் கடலில் நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது தற்போது புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயலுக்கு பாய்லின் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புயல், அடுத்த 12 மணி நேரத்தில் ஆந்திராவையும், ஒடிசாவையும் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, புயல் தாக்குதலால் ஒடிசா கடற்கரை பகுதிகளில் கடும் மழை பொழிவும், பெரும் சேதமும் ஏற்படும் என அஞ்சப்படுகிறது.
ஆந்திராவில் உள்ள கலிங்கப்பட்டினத்திற்கும் ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்திற்கும் இடையில் கரையை கடக்கும் இந்த புயலால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக பாம்பன் துறைமுகத்திலும் இன்று 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதேபோல் புதுச்சேரி, கடலூர், நாகை மாவட்டத்தில் கடலின் சீற்றம் அதிகரித்துள்ளது. இதனால் புதுச்சேரி துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.