சசிகலாவோடு கூட்டு சேர்ந்து தீபக்தான் என்னை வரவச்சான்… கொல்லப்பாக்குறாங்க.. தீபா பகீர் குற்றச்சாட்டு
சசிகலா கும்பலோடு சேர்ந்து தன்னை போயஸ் கார்டனுக்கு வரவழைத்து கொல்லப்பார்க்கிறார் தீபக் என்று தீபா பகீர் குற்றச்சாட்டினார்
சென்னை: போயஸ் கார்டனுக்கு சொந்தம் கொண்டாடிக் கொண்டு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அங்கு நுழைய முயன்றார். இவருடன் அவரது கணவர் மாதவனும் தடுப்பை மீறி உள்ளே செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு வேதா நிலையம் என்ற பெயரில் போயஸ் தோட்டத்தில் உள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அந்த வீட்டில் சசிகலா மற்றும் குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர்.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் சிறைக்கு சென்றனர். இதன் பிறகு அந்த வீட்டில் யாரும் வசிக்காமல் இருந்தனர்.
தீபா வருகை
இந்நிலையில், போயஸ் கார்டனை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த வீடு தனக்கு தான் சொந்தம் என்று கூறி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போயஸ் தோட்டத்திற்கு வந்தார்.
போலீசார் மறுப்பு
கார்டனுக்குள் தீபா நுழைய முயன்ற போது போலீசார் அவரை தடுத்து நிறுத்தினார்கள். மேலும் அவரது உடன் வந்த தீபா ஆதரவாளர்களும் அனைவரும் பாதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
தீபக்தான் காரணம்
இதுகுறித்து எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் நிறுவனர் தீபா செய்தியாளர்களிடம் பேசியதாவது: என்னை எனது சகோதரர் தீபக்தான் போயஸ் கார்டன் வரச் சொன்னார். அதற்காகத்தான் நான் வந்தேன்.
கொல்ல முயற்சி
ஆனால் உள்ளே நுழைந்ததும் என்னை கொல்ல முயற்சி செய்தார்கள். பத்திரிகையாளர் இருந்ததால் நான் தப்பித்து வெளியே வந்தேன்.
கூட்டுச் சதி
சசிகலா கும்பலோடு சேர்ந்து கொண்டு தீபக் என்னை இப்படி செய்கிறார். இந்த கும்பலோடு சேர்ந்து கொண்டுதான் எனது அத்தை ஜெயலலிதாவை கொன்றார் தீபக் என்று தீபா கூறினார்.