போயஸ்கார்டன் அடிதடி - தாக்கியவர்கள் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தீபா புகார்
போயஸ்கார்டன் இல்லத்தில் தன்னை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தீபா சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தினகரனின் தூண்டுதலின் பேரில் தீபாவின் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். அவர்களை கைது செய்ய வேண்டும் என்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிறன்று தனது தம்பி கூப்பிட்டதாக போயஸ்கார்டன் சென்றார் தீபா. ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் வீட்டிற்கு நுழைந்து அங்கிருந்த புகைப்படங்களை அகற்றியதாக தெரிகிறது. இதனையடுத்து வீட்டில் இருந்த பாதுகாவலர்கள் தீபாவை தடுத்துள்ளனர். இதை வீடியோ எடுக்க முயன்ற செய்தியாளர்களையும் தாக்கினர்.
இதனால் போயஸ்கார்டன் வீடு களேபரமானது. செய்தியாளர்களிடம் பேசிய தீபா, தன்னையும், தனது கணவர் மாதவனையும் கொலை செய்ய முயற்சி நடந்ததாக குற்றம் சாட்டினார். இது தொடர்பாக பிரதமரிடம் முறையிடுவேன் என்றும் கூறினார் தீபா. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தனது தம்பி தீபக்கை வாய்க்கு வந்தபடி திட்டினார். போலீசையும் எச்சரித்தார். இதனிடையே இன்று காலை சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தீபாவின் சார்பில் அவரது வழக்கறிஞர் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அதில், கடந்த 11ஆம் தேதியன்று போயஸ் கார்டனில் தீபா மீது தாக்குதல் நடத்திய டிடிவி தினகரனின் ஆதரவாளர்களைக் கைது செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தினகரன் தூண்டுதலின் பேரில் ஆதரவாளர்கள் தீபாவைத் தாக்கியதாகக் கூறப்பட்டுள்ளது.