தனியா நின்னு டெபாசிட் கூட வாங்காத கட்சி பாமக.. என்னை மிரட்டுவதா… தீபா ஆவேசம்
தேர்தலில் தனியாக நின்று டெபாசிட் கூட வாங்காத கட்சி பாமக என்று அதன் தலைவர் டாக்டர் ராமதாசை எம்ஜிஆர் அம்மா கட்சி நிறுவனர் தீபா வசை மாறி பொழிந்திருக்கிறார்.
சென்னை: கடந்த 27ம் தேதி அதிமுகவின் உண்மைத் தொண்டர்கள் 'எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையில் இணைய வேண்டுமென அக்கட்சியின் நிறுவனர் தீபா அழைப்பு விடுத்திருந்தார்.
அந்த அறிக்கையில், இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று ராமதாஸ் ஏற்கனவே கூறியிருந்ததை கடுமையாக தீபா விமர்சனம் செய்திருந்தார்.
மேலும், "தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் போன்றோர்கள் இரட்டை இலையை நிரந்தரமாக முடக்க வேண்டும் என்று அறிக்கை விடுவது கண்டனத்திற்குரியதாகும். எம்ஜிஆர் அவர்களால் கண்டெடுத்த இரட்டை இலை பல வெற்றி சரித்திரத்தை உருவாக்கியுள்ளது.
எலி விமர்சனம்
புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இரட்டை இலை மூலம் பல அரசியல் திருப்புமுனைகளை ஏற்படுத்தி தொடர் வெற்றி சரித்திரத்தை நம் கையில் கொடுத்து சென்றுள்ளார். எடுத்தேன் கவிழ்ப்பேன் என்ற பாணியில் ராம்தாஸ் போன்றவர்கள் ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள மாபெரும் இயக்கத்தையும் சின்னத்தையும் பேசுவது புலியைப் பார்த்து எலி எக்காளம் விடுவது போன்றதாகும்" என்று தீபா கூறியிருந்தார்.
மிரட்டல்
இதற்கு பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை. தீபா இன்று ஒரு அறிக்கையை மீண்டும் வெளியிட்டுள்ளார். அதில், பாமகவைச் சேர்ந்தவர்கள் தன்னை கெட்டவார்த்தை சொல்லி திட்டுவதாகவும், அரசியலில் பெண்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்றால் பாமகவை புறக்கணியுங்கள் என்று கூறியிருக்கிறார்.
நடையாய் நடந்து…
"கூட்டணி என்ற பெயரில் சீட்டுக்களைப் பெற்று போயஸ் தோட்டத்திற்கும் கோபாலபுரத்திற்கும் நடையாய் நடந்து பிழைப்பு நடத்திய பா.ம.க கூட்டம் தனித்து நின்று அரசியல் செல்வாக்கை நிரூபிக்க வில்லை. ஜாதி கலவரத்தை தூண்டியதால் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார் என்பதை எல்லோரும் அறிவார்கள்.
டெபாசிட்
மகனை முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவித்து நாடு முழுவதும் பா.ம.க. டெபாசிட் தொகை இழந்த கதையை ராமதாஸ் மறந்து பேசுகிறார் ? திராவிட கட்சியின் தயவால் எம்.பி. எம்.எல்.ஏக்களை பெற்ற பா.ம.க. தனித்து நின்று ஒரு சீட்டு கூட வெற்றி பெற முடியாததுக்கு காரணம் என்ன?" என்றெல்லாம் தீபா பயங்கரமான கேள்விக் கணைகளை ராமதாஸ் மேல் தொடுத்திருக்கிறார்.