தேர்தலை ஏன் ரத்து செய்ய வேண்டும்? தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்… பேஸ்புக்கில் தீபா தாக்கு
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை ஏன் ரத்து செய்ய வேண்டும் என்றும் பணப்பட்டுவாடா செய்த வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை வேட்பாளர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
சென்னை: தேர்தலை ரத்து செய்யாமல் பணப்பட்டுவாடா செய்த அதிமுக அம்மா கட்சி வேட்பாளரை தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும் என்று தீபா கூறியுள்ளார்.
ஆர்கே.நகர் தொகுதிக்கு வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தங்களின் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தன.
இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு உட்பட 35க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் 89 கோடி ரூபாய் வரை ஆர்கே நகரில் செலவு செய்ததற்கான ஆவணம் சிக்கியதாக கூறப்பட்டது.
சோதனை தொடர்பான அறிக்கையை வருமான வரித்துறை ஞாயிற்றுக்கிழமை சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ராவிடம் வழங்கியது. இந்த அறிக்கை தலைமை தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து நள்ளிரவில் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இடைத்தேர்தல் ரத்தை எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் போட்டியிடும் வேட்பாளரும், ஜெயலலிதாவின் அண்ணன் மகளுமான தீபா தனது பேஸ்புக் பதிவில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதில் தேர்தலை ஏன் ரத்து செய்ய வேண்டும் என்றும் பணப்பட்டுவாடா செய்த வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று டிடிவி தினகரனை தாக்கி பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.