இதென்ன கொடுமை.. தீபாவை விட அவரது வீட்டுக்காரர் கட்சிக்கு செம ஆதரவு கிடைச்சிருக்கே!
ஒன் இந்தியா தமிழ் சர்வேயில் தீபாவை விட தீபாவின் கணவர் கட்சிக்கு கூடுதல் ஆதரவு கிடைத்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் எந்த கட்சியின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது என ஒன் இந்தியா தமிழ் நடத்திய சர்வேயில் தீபா பேரவையைவிட தீபா வீட்டுக்காரர் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்திருப்பது ஆச்சரியமாக உள்ளது.
இந்த கட்சிகளில் யாருக்கு எதிர்காலம் பிரகாசமாக இருப்பதாக நினைக்கிறீர்கள்? என ஒன் இந்தியா தமிழ் தளத்தில் சர்வே நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தில் திமுக- அதிமுகவுக்கு மாற்று எதுவும் இல்லை என அதிகம் பேர் தெரிவித்திருந்தனர்.
நாம் தமிழர், பாஜக
இதையடுத்து நாம் தமிழர் கட்சி, பாஜக, பாமக மற்றும் தேமுதிகவுக்கு ஆதரவாக கணிசமானோர் கருத்து தெரிவித்திருந்தனர். விடுதலை சிறுத்தைகள், மதிமுக, தமாகா ஆகியவற்று தலா 1% வாக்குகள்தான் கிடைத்தது.
மேடிக்கு ஆதரவு
மொத்தம் 35,987 பேர் பங்கேற்ற இந்த சர்வேயில் ஒரு ஆச்சரியமும் நிகழ்ந்திருக்கிறது. தீபாவீட்டுக்காரர் கட்சிக்கு 608 பேர் (1.69%) ஆதரவு தந்துள்ளனர். இது மதிமுக (1.13%) , தமாகா (1.16%), விடுதலை சிறுத்தைகள் (1.3%), புதிய தமிழகம் (0.53%), தமிழக வாழ்வுரிமைக் கட்சி(0.51%) ஆகியவற்றைவிட கூடுதலாகும்.
தீபாவுக்கு குறைவு
இதில் இன்னொரு வேடிக்கையும் இருக்கிறது. தீபா பேரவையும் கூட தீபா வீட்டுக்காரரைவிட குறைவான ஆதரவைத்தான் பெறுள்ளது. தீபா பேரவைக்கு 163 பேர் (0.45%) தான் ஆதரவளித்துள்ளனர்.
பரிதாப சரத்
மற்றொரு குறிப்பிடப்பட வேண்டிய அம்சம் தீபா பேரவையைவிடவும் குறைவான ஆதரவு பெற்றுள்ள கட்சி சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி. அக்கட்சிக்கு வெறும் 84 பேர் (0.23%) மட்டுமே ஆதரவு கொடுத்துள்ளனர்.