என்னது, எடப்பாடி அணியில் இணைகிறாரா தீபா? பரபரப்பு பேட்டி
சசிகலா குடும்பத்தினரை வெளியேற்றத்துக்கு பின்னர் எடப்பாடி அணியில் இணைய தீபா தயாராகி வருவதாக தெரிகிறது.
திருச்சி: மக்களும் தொண்டர்களும் விரும்பினால் எடப்பாடி அணியில் இணைவது குறித்து பரிசீலனை செய்வேன் என்று தீபா தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைந்த பிறகு, சசிகலாவின் தலைமையை ஏற்க விரும்பாத அதிமுக நிர்வாகிகள் குழுமியது தி.நகரில் உள்ள சிவானந்தம் சாலையில் உள்ள தீபாவின் வீட்டிற்கு முன்னால்தான்.
இந்நிலையில் அவருக்கு கூடிய கூட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஓஹோ என்றில்லாவிட்டாலும் ஓரளவுக்காவது முன்னுக்கு வருவார் என்று பலர் நினைத்திருந்தனர்.
ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு
இதைத் தொடர்ந்து சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றதை தொடர்ந்து ஜெயலலிதா சமாதிக்கு ஓபிஎஸ்ஸும், தீபாவும் சொல்லி வைத்தாற் போல் ஒரே நேரத்தில் வந்தனர். அப்போது ஓபிஎஸ்ஸுடன் தானும் இரு கரங்களாக செயல்படுவோம் என்று தீபா தெரிவித்தார்.
ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம்
ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்துக்கு ஓபிஎஸ் அழைப்பு விடுத்தும் தீபா போகவில்லை. மாறாக, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை தொடங்கினார். இதை தொடர்ந்து உறுப்பினர்கள் சேர்ப்பு பணிகள் மும்முரமாகி வந்தன. ஆர்.கே. நகர் இடைதேர்தல் வேட்புமனு தாக்கல் என களைகட்டிய தீபாவின் அரசியல் பிரவேசம் சொந்த பிரச்சினைக்களால் முடங்கிவிட்டது.
கூண்டோடு அழித்தனர்
தீபாவின் செயல்பாடு, கட்சி நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்டவற்றால் அதிருப்தி அடைந்த நிர்வாகிகள் ஆங்காங்கே தொடங்கப்பட்ட அமைப்பை கூண்டோடு நீக்கிவிட்டு ஓபிஎஸ் அணியிலும் பிற கட்சிகளிலும் இணைந்தனர். இதைத் தொடர்ந்து கிட்டதட்ட 9 மாதங்களுக்கு பின்னர் தீபா முதல்முறையாக பொது பிரச்சினைக்காக வெளியே வந்தார். நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
தொண்டர்கள் விரும்பினால்...
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தீபா கூறுகையில் சசிகலா குடும்பத்தினர் திமுகவின் கைகூலிகள்தான். தொடக்கத்தில் இருந்தே திமுகவுடன் இணைந்து ஜெயலலிதாவுக்கு எதிராக செயல்பட்டு வந்துள்ளனர். இதுகுறித்து நான் கூறியபோதெல்லாம் பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு, இப்போது காலம் கடந்து சசிகலா குடும்பத்துக்கு எதிராக களமிறங்கியுள்ளனர். மேலும் எடப்பாடி அணியில் இணைய வேண்டும் என்று மக்களும் தொண்டர்களும் விரும்பினால் அதுகுறித்து பரிசீலனை செய்வேன் என்றார் தீபா.
அப்போ! எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்னவாகும்?... கூண்டோடு கலைப்பா?