தீபாம்மா கட்சி தொடங்கி ஒரு வருஷம் ஆயிடுச்சு! இதுவரைக்கும் என்னதான் செஞ்சிருக்காங்க?
தீபா கட்சி ஆரம்பித்து ஓராண்டாகியுள்ள நிலையில் அவர் இதுவரை என்ன செய்துள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: தீபா கட்சி ஆரம்பித்து ஓராண்டாகியுள்ள நிலையில் அவர் இதுவரை என்ன செய்துள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மீடியா வெளிச்சத்துக்கு வந்தார் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா.
ஜெயலலிதா மரணம் தொடரபாக சசிகலா குடும்பத்தினர் மீது தீபா கூறிய அதிரடி குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள், ஜெயலலிதா போன்ற உருவ அமைப்பு ஆகியவை தீபாவுக்கு அதிமுகவினரிடையே பெரும் வரவேற்பை கொடுத்தது.
தீபாவின் அரசியல் ஆசை
தீபாவின் வீட்டிற்கு முன்பு திரண்ட கூட்டம் மற்றும் மக்களிடையே கிடைத்த வரவேற்பு உள்ளிட்டவை தீபாவுக்குள் அரசியல் ஆசையை தூண்டியது. இதைத்தொடர்ந்து சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் தொடங்கிய ஓபிஎஸுடன் கூட்டு சேர்ந்தார் தீபா.
பேரவையை தொடங்கிய தீபா
இடையில் என்ன ஆனதோ தெரியவில்லை திடீரென ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸை கடுமையாக விமர்சிக்க தொடங்கினார் தீபா. இதைத்தொடர்ந்து 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று தீபா, எம்ஜிஆர், அம்மர், தீபா பேரவை என்ற பேரவையை தொடங்கினார்.
இப்படி ஒரு கட்சி உள்ளதா?
அவரது இந்த பேரவை சமூக வலைதளங்களில் படாதபாடு பட்டது. கட்சி தொடங்கி ஓராண்டு ஆகிவிட்டது. ஆனால் பலருக்கும் இப்படி ஒரு கட்சி உள்ளதா என்று கூட தெரியாத அளவுக்கு தான் தீபாவின் பேரவை உள்ளது.
இன்னும் எதற்கு?
பேரவை தொடங்கிய ஓராண்டில் அதிகளவு குடும்பச்சண்டையில் ஈடுபட்டதும், ஏராளமான மோசடி புகார்களுக்கு உள்ளானதுமே தீபாவின் சாதனையாக உள்ளது. தீபா ஒரு மோசடி பேர்வழி எனக்கூறி பலர் பாதியிலேயே பிய்த்துக்கொண்டு ஓடிய நிலையில், இப்படி ஒரு பேரவை இன்னும் எதற்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.