தீபா சின்னம் எங்கப்பா இருக்கு.. அடப் பாவமே.. என்னய்யா இது!
சென்னை: இருந்தாலும் இந்த தேர்தல் ஆணையத்துக்கு இப்படி ஓரவஞ்சனை இருக்கக் கூடாது. தீபாவின் படகுச் சின்னம் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்கு எந்திரத்தில் 34வது இடத்தில் இருக்கிறதாம்.
அதாவது சுயேச்சைகள் வரிசையில் கொண்டு போய் தீபாவைப் போட்டு விட்டனர். அதே சமயம், தொப்பி தினகரனும், மின்கம்பம் மதுசூதனும் டாப்பில் உள்ளனராம்.
இப்படி கொண்டு போய் கடைசியில் போட்டால் எப்படி என்ற தீபா தரப்பு பெரும் விசனத்தில் உள்ளதாம். கடைசியில் தீபாவை சுயேச்சையாக்கி விட்டார்களே என்று அவரது ஆதரவாளர்களும் கலங்கிப் போயுள்ளனராம்.
62 வேட்பாளர்கள்
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ஏப்ரல் 12ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 62 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்று பார்த்தால் திமுக, அதிமுக அ, அதிமுக பு அ, நாம் தமிழர், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக ஆகியவைதான் களத்தில் உள்ளன.
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை
இவை தவிர முக்கியஸ்தர்கள் என்று பார்த்தால் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் தலைவியான தீபா மட்டும்தான். ஆனால் தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை தீபா ஒரு சுயேச்சைதான். மது சூதனன், தினகரனுக்கு கிடைத்த அங்கீகாரம் கூட தீபாவுக்குக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
34வது இடத்தில் தீபா
இதன் காரணமாக தீபாவை வேட்பாளர் பட்டியலில் 34வது இடத்தில் கொண்டு போய் வைத்துள்ளனர். அதாவது சுயேச்சைகள் வரிசையில்தான் இருக்கிறார். அவரது பெயரை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும்.
மது - தினகரன்
அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் தினகரன் 2வது இடத்தில் இருக்கிறார். அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனனுக்கு பெயர் வரிசையில் 4வது இடம் கிடைத்துள்ளது. இவர்களுக்கு டாப்பில் இடம் கிடைத்திருப்பது இவர்களது ஆதரவாளர்களை குஷிப்படுத்தியுள்ளது.