ஜெ.தீபா வீட்டுக்கு வந்த போலி அதிகாரி மீது மாதவன் புகார்
ஜெ. தீபா வீட்டுக்கு வருமான வரி சோதனை நடத்த வந்த போலி அதிகாரியை கைது செய்ய கோரி மாதவன் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: ஜெ.தீபா வீட்டுக்கு வருமான வரி சோதனை நடத்த வந்த போலி அதிகாரியை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று மாதவன் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தி.நகர் சிவஞானம் சாலையில் வசித்து வருகிறார். இன்று அதிகாலை அவரது வீட்டுக்கு ஒருவர் வந்தார். அவர் தனது பெயர் மித்தேஷ் குமார் என்றும் வருமான வரித்துறை அதிகாரி என்றும் மாதவனிடம் தெரிவித்துள்ளார். தனது அடையாள சான்றிதழையும் காண்பித்துள்ளார்.
அப்போது தீபா வீட்டில் இல்லை. 10 மணிக்கு மேலும் 10 அதிகாரிகள் வந்தவுடன் சோதனை நடத்துவதாகவும் அவர் தெரிவித்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட தீபாவின் வழக்கறிஞர் போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து தீபாவின் வீட்டிற்கு வந்த போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்த அந்த நபர் திடீரென ஓட்டம் பிடித்தார். அவரை போலீஸாரும் துரத்தி கொண்டு ஓடினர். எனினும் அவர் சிக்கவில்லை. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து வீட்டில் சோதனையிட முயன்ற நபர் குறித்து, மாம்பலம் காவல் நிலையத்தில் தீபாவின் கணவர் மாதவன் புகார் அளித்துள்ளார். போலி அதிகாரி கைது செய்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் மனு அளித்துள்ளார்.