போயஸ் புயலைத் தொடர்ந்து தீபாவின் அடுத்த அதிரடி....'ஆபரேஷன் ராஜம்மாள்'
போயஸ் கார்டன் களேபரங்களைத் தொடர்ந்து தீபா தற்போது ஜெயலலிதாவின் நீண்டகால உதவியாளர் ராஜம்மாளை பேச வைக்க முயற்சிக்கிறாராம்.
சென்னை: போயஸ் கார்டனில் புயலை உருவாக்கிய தீபாவின் அடுத்த அதிரடி 'ஆபரேஷன் ராஜம்மாள்" என்கின்றன அவரது நெருங்கிய வட்டாரங்கள்.
அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் இணையுமா?' என்ற கேள்வியைவிட, தீபாவின் போயஸ் கார்டன் வருகை அரசியல் அரங்கத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. கார்டனுக்குப் போனால் பெரிய அளவுக்கு செட்டில்மெண்ட் கிடைக்கும் என்று நம்பித்தான் தீபாவும் அவருடைய ஆட்களும் உள்ளே சென்றார்கள். நிலைமை வேறுவிதமாக மாறிவிட்டது என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காலத்தில் இருந்தே சசிகலாவுக்கு எதிராகக் கடுமையாகப் பேசி வருகிறார் தீபா. ஜெயலலிதா குடும்பத்தின் ஒரே ஆண் வாரிசு என்ற அடிப்படையில், தீபாவின் தம்பி தீபக்கை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார் நடராசன். தீபக்கும் 'அங்கிள் என்ன சொன்னாலும் நான் கேட்பேன். அவர்தான் எனக்கு எல்லாம்' என வெளிப்படையாகவே பேசி வந்தார் தீபக்.
தீபா பேரவை
ஜெயலலிதாவுக்கு இறுதிக் காரியங்களையும் அவர்தான் செய்தார். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு பேரவையைத் தொடங்கி நடத்தி வந்தார் தீபா. அதிலும் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
தீபாவுக்கு போன்
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காலை நேரத்தில் போயஸ் கார்டனில் ஏற்பட்ட தகராறு தேசிய அளவில் பிரதான செய்தியானது. இதைப் பற்றி நம்மிடம் பேசிய கார்டன் ஊழியர் ஒருவர், அன்னைக்குக் காலையில் 7 மணிக்கு முன்னதாகவே தீபக் வந்துவிட்டார். நான் சொன்னால் அவள் வருவாள். உட்கார்ந்து பேசி முடிவு செய்கிறோம்' என போனில் பேசிக் கொண்டிருந்தார்.
போயஸ் பங்களாவில் தீபா
அடுத்து, தீபாவுக்குப் போன் செய்தார். நான் கார்டன்லதான் இருக்கேன். இங்க யாருமில்லை. உடனே கிளம்பி வா' எனக் கூறியிருக்கிறார். தீபாவும் அடுத்த அரை மணிநேரத்தில் வந்துவிட்டார்.
ஓடிவந்த ராஜம்மாள்
தீபாவைப் பார்த்ததும் நீண்டகாலம் கார்டனில் பணியாற்றும் ராஜம்மாள் ஓடி வந்தார். அவரிடம், அவர் ஏதோ பேச முயற்சிக்கையில் கார்டன் ஊழியர்கள் தடுத்துவிட்டனர். கார்டனில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் இருக்கிறார் ராஜம்மாள். அவரை விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும் என நம்புகிறார் தீபா.
ராஜம்மாளை கண்ட்ரோலில் எடுக்கும் தீபா
கார்டனைவிட்டு அவரை வெளியில் கொண்டு வரும் வேலைகளில் தீவிரமாக இருக்கிறார் தீபா. ராஜம்மாளைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டால், அப்போலோ செல்வதற்கு முதல்நாள் இரவு கார்டனில் என்ன நடந்தது என்பது தெரியவரும் என உறுதியாக நம்புகிறார். சென்னையைச் சேர்ந்த ராஜம்மாவின் முகவரியையும் தேடிக் கொண்டு இருக்கிறாராம் தீபா.