தீபாவை எப்படி தாக்கலாம்.. தினகரன் கொடும்பாவியை எரித்து ஆதரவாளர்கள் சாலை மறியல்.. தி.நகரில் பரபரப்பு
போயஸ் கார்டனில் தீபா தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று திடீரென போயஸ் கார்டன் வந்தார். அப்போது அவர் தாக்கப்பட்டதாகக் கூறி அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு வேதா நிலையம் என்ற பெயரில் போயஸ் தோட்டத்தில் உள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அந்த வீட்டில் சசிகலா மற்றும் குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர்.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் சிறைக்கு சென்றனர். இதன் பிறகு அந்த வீட்டில் யாரும் வசிக்காமல் இருந்தனர்.
திடீர் பரபரப்பு
இந்நிலையில், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை நிறுவனர் தீபா இன்று திடீரென போயஸ் கார்டன் வீட்டிற்கு வருகை தந்தார். கார்டனுக்குள் தீபா நுழைய முயன்ற போது போலீசார் அவரை தடுத்து நிறுத்தினார்கள்.
கதறி அழுத தீபா
இதனைத் தொடர்ந்து, சகோதரர் தீபக் தன்னை வரச் சொன்னதாகவும், சசிகலா கும்பலோடு சேர்ந்து கொண்டு கொல்ல பார்க்கிறார் தீபக் என்றும் தீபா குற்றம்சாட்டினார். தான் தாக்கப்பட்டதாகக் கூறி அழுது கொண்டே தீபா பேட்டி அளித்தார்.
கொதித்த ஆதரவாளர்கள்
இந்நிலையில், தீபாவின் ஆதரவாளர்கள் திடீரென தீபாவின் வீட்டின் முன் ஒன்று கூடினார்கள். அவருக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினார்கள். போயஸ் கார்டனில் அவர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
சாலை மறியல்
பின்னர், அவர்கள் அனைவரும், சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது தினகரனின் கொடும்பாவி எரித்து, எதிர் முழக்கங்களை எழுப்பினார்கள்.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் தியாகராயர் நகர் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும், அந்தப் பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.