ஆர்.கே.நகரில் எப்போது தேர்தல் நடந்தாலும் நான்தான் வெற்றி பெறுவேன் - தீபா நம்பிக்கை
ஆர்.கே.நகரில் ஜனநாயகப்படி தேர்தல் நடந்தால் அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன் என்று தீபா கூறியுள்ளார்.
சென்னை: தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எப்போது நடந்தாலும் அங்கு போட்டியிட்டு நானே வெற்றி பெறுவேன் என்று ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.
ஆர்கே.நகர் தொகுதிக்கு வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தங்களின் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தன. இதனிடையே அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு உட்பட 35க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் 89 கோடி ரூபாய் வரை ஆர்.கே. நகரில் செலவு செய்ததற்கான ஆவணம் சிக்கியதாக கூறப்பட்டது.
இதையடுத்து ஆலோசனை நடத்திய தேர்தல் ஆணையம் நேற்று நள்ளிரவு தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்தது. இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை வேட்பாளர் தீபா கூறுகையில், ஜனநாயகம் காக்கப்பட பணப்பட்டுவாடா செய்தவர்களை தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்து 6 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும். தோல்வி பயத்தால் தினகரன் ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்துள்ளார். உழல் வழக்கில் சிக்கிய தினகரன் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்திருக்க வேண்டும்.
பணப்பட்டுவாடா உண்மை என்பதை கண்டறிந்து தேர்தலை ரத்து செய்ததை வரவேற்கிறேன். ஜனநாயகப்படி தேர்தல் நடந்தால் அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன். இவ்வாறு அவர் கூறினார்.