ஆர்.கே.நகரில் தீபா படு தோல்வி அடைவார்.. அடித்துச் சொல்லும் ஒன்இந்தியா தமிழ் வாசகர்கள்!
சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தீபா போட்டியிட்டால் நிச்சயம் படு தோல்வி அடைவார் என்று ஒன்இந்தியா தமிழ் வாசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆர்.கே.நகரில் தீபா வெல்ல முடியுமா என்ற கேள்வியை நாம் வாசகர்களிடம் கேட்டிருந்தோம். அதில் ஒரே குரலில் முடியாது என்று வாசகர்கள் கூறி விட்டனர்.
அதேசமயம், அவர் ஜெயிச்சா என்ன ஜெயிக்காட்டி என்ன என்றும் கணிசமானவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
எம்.ஜி.ஆர். அம்மா தீபா
ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, எம்.ஜி.ஆர். அம்மா தீபா என்ற வித்தியாசமான பெயரில் பேரவை ஒன்றைத் தொடங்கி நடத்தி வருகிறார். இது கட்சியா, சங்கமா, இதன் கொள்கை என்ன, கோட்பாடு என்ன என்பது யாருக்குமே தெரியவில்லை. இந்த நிலையில் ஆர்.கே.நகரில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார் தீபா.
ஜெயிக்க முடியுமா?
இதையடுத்து அவரால் ஆர்.கே.நகரில் ஜெயிக்க முடியுமா என்று கேட்டிருந்தோம். அதற்கு நிச்சயம் வெல்வார் என்று 14.01 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
படு தோல்வி அடைவார்
அதேசமயம், அவர் படு தோல்வி அடைவார் என்று 54.7 சதவீதம் பேர் அடித்துக் கூறியுள்ளனர். அதாவது பதிவான வாக்குகளில் பாதிக்கும் மேற்பட்டவை தீபாவுக்கு எதிராகவே கிடைத்துள்ளது.
ஜெயிச்சா என்ன ஜெயிக்காட்டி எனக்கென்ன!
அதேசமயம் அவர் ஜெயிச்சா என்ன ஜெயிக்காட்டி எனக்கென்று புறக்கணிப்பு செய்துள்ளவர்களும் கணிசமாக உள்ளனர். அதாவது 31.29 சதவீதம் பேர் இப்படி பதிலளித்துள்ளனர்.