ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கையை வெளியிட்ட தமிழ் டிவி சேனலுக்கு தீபக் கண்டனம்!
ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கையை வெளியிட்ட தமிழ் டிவி சேனலுக்கு தீபக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கையை வெளியிட்ட தமிழ் டிவி சேனலுக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகனான தீபக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது என்ன நிலைமையில் இருந்தார் என்பது குறித்த முதல் அறிக்கையை தமிழ் டிவி சேனல் ஒன்று இன்று காலை வெளியிட்டது. அதில் ஜெயலலிதா உடல்நிலை குறித்த பல முக்கிய தகவல்கள் இடம்பெற்றிருந்தது.
அந்த தமிழ் டிவி சேனலின் இந்த துணிச்சலான நடவடிக்கைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர். நேரலையாக ஒளிப்பரப்பான அந்நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின் அண்ணன் மகனான தீபக்கும் பங்கேற்றார்.
3 கிளைகளுக்கும் அழைப்பு
அப்போது 24ஆம் தேதிதான் தனது அத்தையான ஜெயலலிதாவை சந்திக்க அப்பல்லோ சென்றதாக கூறினார். அப்போது ஜெயலலிதா உடல்நிலை சரியில்லலாமல் போனதும் அப்பல்லோ மருத்துவமனையின் 3 கிளைகளுக்கும் ஆம்புலன்ஸ் கேட்டு போயஸ்கார்டனில் இருந்து போன் போனதாக அவர் கூறினார்.
முதலில் வந்த ஆம்புலன்ஸ்
முதலில் வந்த ஆம்புலன்ஸிலேயே ஜெயலலிதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் அவர் கூறினார். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணையில் எல்லாம் தெரிய வரும் என்றார்.
ராம மோகன ராவை விசாரியுங்கள்
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றபோது அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ்தான் உடனிருந்ததாக அவர் கூறினார். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அவரிடம் தான் விசாரிக்க வேண்டும் என்றும் தீபக் தெரிவித்தார்.
டிவி சேனலுக்கு எதிர்ப்பு
மேலும் ஜெயலலிதா மரணமடைந்து முதலாமாண்டு நினைவஞ்சலியே வரவுள்ளது. இப்போது இதைப்பற்றி பேசுவது சரியா என்றும் டிவி சேனலுக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.
தீபக்கின் பேச்சு வியப்பு
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் சந்தேகத்தை அகற்ற தொண்டர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகனான தீபக் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.