வேதா நிலையத்தை நினைவிடமாக்கும் முன் எங்களை கேட்க வேண்டும்- முதல்வருக்கு தீபக் கடிதம்
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்க எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்றும் எங்களை கேட்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: வேதா நிலையம் வீடு எனக்கும் எனது சகோதரி தீபாவுக்கும் சொந்தமானது. அதனை எங்கள் அனுமதியின்றி நினைவிடமாக மாற்ற முடியாது என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கடிதம் எழுதியுள்ளார்.
போயஸ் கார்டன் இல்லத்தை ஜெயலலிதா யாருக்கும் எழுதி வைக்கவில்லை. அதனை நினைவிடமாக மாற்ற வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. அதே நேரத்தில் நினைவிடமாக்குவதற்கு முன் சட்டப்படி எங்களிடம் கருத்து கேட்க வேண்டும்.
போயஸ் கார்டன் வீடு ஜெயலலிதாவின் நினைவிடம் ஆக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி நேற்று அறிவித்தார். இதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.
இதனை அடுத்து ஜெயலலிதா வீட்டுக்கு உரிமை கொண்டாடி தீபா உள்ளிட்டோர் வரலாம் என்பதால் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீடு அருகே போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.
தீபாவின் சகோதரரும், ஜெயலலிதாவின் அண்ணன் மகனுமாகிய தீபக் அரசின் முடிவை வரவேற்று உள்ளார். மேலும் அரசின் முடிவை தான் வரவேற்பதாகவும் தெரிவித்தார்.
தீபா எதிர்ப்பு
போயஸ் கார்டன் வீடு தங்களின் குடும்ப சொத்து தீபா நேற்று கூறி இருந்தார். இந்நிலையில் அந்த வீடு தங்களுக்கு தான் சொந்தம் எனவும் அதை நினைவிடமாக மாற்றும் முன்பாக சட்டப்பூர்வமான வாரிசுகளான தங்களிடம் கேட்க வேண்டும் என்று கடிதம் எழுதி உள்ளார்.
தீபக் கடிதம்
தீபக் எழுதி உள்ள கடிதத்தில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் வீடு எனக்கும் எனது சகோதரி தீபாவுக்கும் சொந்தமானது. அதனை எங்கள் அனுமதியின்றி நினைவிடமாக மாற்ற முடியாது.
பாட்டியின் உயில்
ஜெயலலிதாவின் தாயார் சந்தியா எழுதிய உயிலின் படி அந்த வீடு வாரிசுகளான எங்களுக்கே உரியது. எங்களின் ஒப்புதல் இல்லாமல் நினைவிடமாக மாற்ற நினைப்பது சட்டப்படி குற்றம்.
கருத்து கேட்க வேண்டும்
போயஸ் கார்டன் இல்லத்தை ஜெயலலிதா யாருக்கும் எழுதி வைக்கவில்லை. அதனை நினைவிடமாக மாற்ற வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. அதற்கு ஆட்சேபனையும் கிடையாது. அதே நேரத்தில் நினைவிடமாக்குவதற்கு முன் சட்டப்படி எங்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
கடிதத்தில் குழப்பம்
ஜெயலலிதாவின் வீடு நினைவிடமாக மாற்றப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அறிவித்தார். ஆனால் தீபக் எழுதிய கடிதத்தில் தேதி 9ஆம் தேதி என்றும் பின்னர் 16ஆம் தேதி என்றும் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் அறிவிக்கும் முன்பாகவே அவர் கடிதம் எழுதி வைத்திருந்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.