தம்பி சிவில் கோர்ட்டுக்கு போங்க.. வாரிசு சான்றிதழ் கேட்ட தீபக்குக்கு வட்டாட்சியர் அட்வைஸ்!
ஜெயலலிதா வாரிசாக தம்மை அறிவிக்குமாறு தீபக் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசாக தன்னை அறிவிக்குமாறு தீபக் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு என குடும்பமோ குழந்தைகளோ இல்லை. அதிமுக தொண்டர்களும் தமிழக மக்களும் தான் தனது குடும்பம் குழந்தைகள் என கூறிவந்தார் ஜெயலலிதா.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் அவரது பல கோடி ரூபாய் சொத்துக்கள் யாரை சேரும் என்ற கேள்வி எழுந்தது.
நாங்கள் தான் வாரிசு
அப்போது தாங்கள் தான் வாரிசு என கூறி வந்தன ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும், தீபக்கும். முதலில் அத்தை பயன்படுத்திய பேனா மட்டும் போதும் என்ற தீபா, போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் தங்களுக்குதான் சொந்தம் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வாரிசாக அறிவிக்கக்கோரி
ஆனால் தீபக்கோ ஜெயலலிதாவின் வாரிசாக தன்னை அறிவிக்கக்கோரி கிண்டி வட்டாட்சியரிடம் மனுத்தாக்கல் செய்தார். ஜெயலலிதாவின் வாரிசு தான்தான் என வாரிசு சான்று வழங்குமாறு அவர் விண்ணப்பித்திருந்தார்.
நீதிமன்றத்தை அணுக அட்வைஸ்
இந்நிலையில் வாரிசு சான்றிதழ் கோரிய தீபக்கின் மனுவை கிண்டி வட்டாட்சியர் நிராகரித்துள்ளார். மேலும் சிவில் நீதிமன்றத்தை அணுகுமாறும் கிண்டி வட்டாட்சியர் தீபக்குக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தேவையான ஆவணங்கள் இல்லை
தேவையான ஆவணங்கள் எதையும் தீபக் தாக்கல் செய்யாததால் அவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஒருமுறை இதேபோல் தீபக்கின் மனு நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.