திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: மகா கொப்பரை தயார்; சிறப்பு ரயில்கள் இயக்கம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி 2,688 அடி உயரம் உள்ள மலை உச்சியில் மகா கொப்பரை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தீபத்திருவிழாவைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என்பதை முன்னிட்டு சென்னை, விழுப்புரத்தில் இருந்து இன்றும் நாளையும் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
மகா தீபக் கொப்பரை
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் மகாதீபத்திருவிழா நாளை நடைபெறுகிறது. இதனையொட்டி அண்ணாமலையார் கோயிலில் தீபக் கொப்பரைக்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
மாலை உச்சியில் தயார்
கோ பூஜைக்குப் பிறகு கோயில் யானை ஆசீர்வாதத்துடன் தீபக் கொப்பரை 2,688 அடி உயரம் உள்ள அண்ணாமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
தீபக் கொப்பரையை சுமந்து செல்லும் சாவல்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த பரம்பரையினர் கொப்பரையைத் தூக்கிச் சென்றனர்.
காலையில் பரணி தீபம்
தீபத் திருவிழாவின் 9-ம் நாளான இன்று காலை புருஷா முனி வாகனத்தில் விநாயகர், சந்திரசேகரர் வீதியுலா நடைபெற்றது. நாளை அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படும்.
மாலையில் மகாதீபம்
மாலையில் தங்க விமானத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருள, அர்த்தநாரீஸ்வரர் காட்சி தர மாலை 6 மணியளவில் அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படவுள்ளது.
சிறப்பு ரயில்கள்
திருவண்ணாமலை தீபத் திரு விழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக திருச்சி ரயில்வே கோட்டம் சார்பில் சென்னை சென்ட்ரல் மற்றும் விழுப் புரத்தில் இருந்து இன்றும், நாளையும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
சென்னையிலிருந்து
சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்படும் ரயில் பகல் 3.15 மணிக்கு திருவண்ணாமலை வந்து சேரும். மறுமார்க்கத்தில் இரவு 10 மணிக்கு அங்கிருந்து புறப்படும் ரயில் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் 8 இணைக்கப் பட்டுள்ளன.
ரயில் நிற்கும் இடங்கள்
பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், சோளிங்கர், வாலாஜா ரோடு, முகுந்தராயபுரம், காட்பாடி, வேலூர் கன்டோன்மென்ட், கணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணி ரோடு, போளூர், அகரம் மற்றும் துரிஞ்சாபுரத்தில் இந்த ரயில் நின்று செல்லும்.
விழுப்புரத்தில் ரயில்கள்
விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 9.20 மணிக்கு புறப்படும் ரயில் திரு வண்ணாமலைக்கு பகல் 11.30 மணிக்கு வந்துசேரும். மறுமார்க் கத்தில் 1.30 மணிக்கு புறப்படும் ரயில் மாலை 3.45 மணிக்கு விழுப்புரம் சென்றுசேரும். இந்த ரயிலில் 2-ம் வகுப்பு 7 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் விழுப்புரம்-திருவண்ணாமலை இடையிலான அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.
இரண்டு ரயில்கள்
அதேபோல, மற்றொரு சிறப்பு ரயில் விழுப்புரத்தில் இருந்து காலை 11 மணிக்கு புறப்பட்டு பகல் 12.50 மணிக்கு திருவண்ணாமலை வந்துசேரும். மறுமார்க்கத்தில் 3.10 மணிக்கு புறப்படும் ரயில் மாலை 4.55 மணிக்கு விழுப்புரம் சென்றடையும். இந்த ரயிலில் 2-ம் வகுப்பு பெட்டிகள் 6 இணைக்கப்பட்டுள்ளன. அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.
எக்ஸ்பிரஸ் ரயில்கள்
மேலும், வழக்கமாக விழுப்புரம்-காட்பாடி இடையில் இயக்கப்படும் பயணிகள் ரயில், திருப்பதி-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் இன்றும், நாளையும் திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் 20 நிமிடங்கள் நின்று செல்லும் என்று திருச்சி கோட்ட ரயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.