எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து... களை கட்டியது தீபாவளி!
தமிழகம் முழுவதும் தீபாவளிப் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மக்கள் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று தீபாவளி வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. அதிகாலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து மக்கள் தீபாவளியை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
இன்று தீபாவளிப் பண்டிகை தமிழகத்தில் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. தீபாவளியைக் கொண்டாட மக்கள் புத்தாடை வாங்கியும், புதுப் பொருட்களை வாங்கியும் இந்த நாளை வழக்கமான கொண்டாட்டத்துடன் வரவேற்றனர்.
அதிகாலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து பட்டாசு வெடிக்க ஆரம்பித்தனர். வேலை நிமித்தமாக சென்னை மற்றும் வெளிமாநிலங்களில் வசிக்கும் பலர் சொந்த ஊருக்கு வந்து குடும்பத்துடனும், உறவினர்களுடனும், நண்பர்களுடனும் தீபாவளியை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
தீபாவளிப் பண்டிகைக்காக சென்னையிலிருந்து மட்டும் கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் தமிழகம் முழுவதும் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அக்டோபர் 26ம் தேதி முதல் 3 நாள்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
அரசுப் பேருந்துகளில் மக்கள் இந்த முறை மிகுந்த சந்தோஷத்தோடு பயணித்தனர். காரணம், அந்த அளவுக்கு சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் அதிக அளவிலான பேருந்துகளை அரசு ஏற்பாடு செய்திருந்தது.
தற்காலிக பேருந்து நிலையங்கள், அதிக அளவு சிறப்பு பேருந்துகள், சிறப்பு பேருந்துகள் உள்ளிட்ட ஏற்பாடுகளால் மக்களுக்கு எந்த சிரமமும் ஏற்படவில்லை. அதேசமயம், தனியார் ஆம்னி பேருந்துகள் மீதான கண்காணிப்பு தீவிரமாக இருந்ததால் ஆம்னி பேருந்துகள் இந்த முறை பொலிவிழந்து காணப்பட்டன.
விமானங்கள் நிரம்பி வழிந்தன
சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பஸ் ரயில்கள்தான் நிரம்பி வழிந்தன என்று பார்த்தால் விமானங்களும் கூட கடந்த 2 நாட்களாக நிரம்பி வழிந்துள்ளனவாம். அதாவது கடந்த 2 நாட்களுக்கு டிக்கெட் அனைத்தும் முன்கூட்டியே புக் ஆகி விட்டதாம்.
மதுரைக்கு இயக்கப்படும் 8 விமானங்கள், திருச்சி செல்லும் 4 விமானங்கள், தூத்துக்குடிக்குப் போகும் 2 விமானங்கள் ஆகியவை கடந்த 2 நாட்களாக நிரம்பியுள்ளன. முன்கூட்டியே அனைத்து டிக்கெட்களும் புக் ஆகி விட்டனவாம்.