முடிந்தது தீபாவளி.. சென்னைக்கு மீண்டும் படையெடுத்த மக்கள்.. தாம்பரம் அருகே கடும் "ஜாம்"!
தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள், சென்னை உள்ளிட்ட தங்கள் பணியிடங்களுக்கு இன்று திரும்புவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை : திபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தவர்கள் விடுமுறை முடிந்து இன்று ஒட்டு மொத்தமாக அனைவரும் சென்னை திரும்புவதால் சென்னை பெருங்களத்தூர் - தாம்பரம் இடையே இன்று அதிகாலை முதல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்தாண்டு தீபாவளி சனிக்கிழமையில் வந்ததால், ஞாயிற்றுக்கிழமையும் சேர, சென்னை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட நகரங்களில் பணிபுரிந்தவர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடச் சென்றனர். சென்னையிலிருந்து மட்டும், 11,225 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும், சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்தும், 21,289 பேருந்துகள் இயக்கப்பட்டன.
புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 3 நாட்களில் மட்டும் அரசுப் பேருந்துகள் மூலம் 5,24,524 பேர் ஊருக்கு பயணித்ததாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. இதுதவிர, ஆம்னி பேருந்துகள், ரயில்கள், சொந்த வாகனங்கள் மூலமாகவும் லட்சக்கணக்கானோர் தீபாவளி கொண்டாட சொந்த ஊர் சென்றனர். பல லட்சம் பேர் ஒரே நேரத்தில் சொந்த ஊர் சென்றதால் சென்னை சாலைகள் காலியாக வெறிச்சோடி காணப்பட்டது. நெருக்கடியான காணப்படும் சென்னை சாலைகள் தீபாவளி நாளான சனிக்கிழமையும், ஞாயிறன்றும், வெறிச்சோடி, காலியாக காணப்பட்டன.
தீபாவளி விடுமுறை முடிந்து திங்கட்கிழமையன்று இன்று முதல் அலுவலகம் மற்றும் பள்ளிகள் திறக்கப்படுவதால், அவரவர் பணியிடங்களுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர். இதையொட்டி, மதுரை, நெல்லை, திருச்சி, கோவை, காரைக்குடி, சேலம், கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட நகரங்களிலிருந்து, தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தென்மாவட்டங்களில் இருந்து சென்னை வந்த பேருந்துகள் அனைத்து பெருங்களத்தூர், தாம்பரத்தில் ஸ்தம்பித்து நிற்கின்றன. போக்குவரத்து நெரிசலால் தாம்பரம் ரயில் மற்றும் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
மாநகரப் பேருந்துகளில் பயணிகள் நெருக்கியடித்துச் செல்கின்றனர். 5 தற்காலிக பேருந்து நிலையங்களில் இன்றும் செயல்பட்டிருக்கலாம் என்று பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் இந்த போக்குவரத்து நெரிசலால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.